வீட்டின் கதவை உடைத்து சவுக்குசங்கரை கைது செய்த காவல்துறை
1 min read
Police arrested Savukkushankar by breaking down the door of the house
13.12.2025
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு மற்றும் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவர், மீண்டும் தனது சவுக்கு மீடியா சேனலை நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவர் மீதும், அவரது குழுவில் பணியாற்றுவோர் மீதும் ஆதம்பாக்கம் போலீசார், சினிமா தயாரிப்பாளர் அளித்த புகாரின் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக, இன்று காலை சென்னை மாநகர போலீஸ் படையினர் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர்.
வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீசாரால் உடனடியாக கைது செய்ய முடியவில்லை.வீட்டினுள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீசார் வந்துள்ளதாக, வீடியோ வெளியிட்டார். இதையடுத்து தீ அணைப்பு வீரர்கள் உதவியுடன் கதவை உடைத்த போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.