சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்க்க தடை
1 min read
Pitbulls and Rottweilers banned from being bred in Chennai
19.12.2025
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வாக்காளர் திருத்த சிறப்பு பணிகளுக்காக கடந்த மாதம் நடைபெறவில்லை. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ஏற்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும். நாளை முதல் வீடு வீடாக ஆய்வு செய்து உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ,5000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.