நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
High Court orders seizure of book against Judge G.R. Swaminathan
7.1.2026
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த புத்தக கண்காட்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் ஒன்றை கீழைக்காற்று பதிப்பகம் வெளியிடவிருந்தது.
இந்நிலையில், கீழைக்காற்றை பதிப்பகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் அவதூறு பரப்பும் வகையில் மட்டுமல்ல. கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அறிவு சார் தளமான புத்தக காட்சியில் இது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது. ஆகவே அந்த புத்தகத்தை பறிமுதல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கீழைக்காற்று பதிப்பகம் மூன்று வாரங்களில் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், “குறிப்பிட்ட புத்தகம் நாளை விற்பனைக்கு வராத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.