இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததாக ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
1 min read
Iran executes man for spying for Israel
9.1.2026
இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு உளவுபார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்த நபரின் பெயர் அலி அர்தெஸ்தானி எனவும், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு பல்வேறு ரகசிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் ஈரானின் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கிரிப்டோகரன்சி மூலம் அவர் அந்த பணத்தை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஈரான் காவல்துறை அதிகாரிகள் அலி அர்தெஸ்தானியை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததை ஒப்புக்கொண்டார் எனவும், அவருக்கு சன்மானமாக ஒரு மில்லியன் டாலர் பணம் மற்றும் பிரிட்டிஷ் விசா கிடைக்க இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அலி அர்தெஸ்தானி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதே சமயம், ஈரானில் குறிப்பாக அரசியல் மற்றும் தேச விரோத வழக்குகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்து பல்வேறு மனித உரிமை குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.