“போராட்டம் தொடரும்”: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு
1 min read
‘Our struggle will continue’: Part-time teachers’ statement
15.1.2026
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. அலுவலகம் அருகில் நேற்று 7-வது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து, தி.மு.க. தேர்தல் வாக்குறுதி எண் 181-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைத்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவடைந்து போராட்ட களத்திற்கு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்தனர்.
இதுகுறித்து, பகுதி நேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியபோது, ‘எங்களுக்கு தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த வாக்குறுதி எண் 181-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்களின் முக்கியமான ஒற்றை கோரிக்கை ஆகும். ஆனால் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, எங்கள் போராட்டம் தொடரும்’ என்றார்கள்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, பஸ்சில் ஏற்றி மண்டபங்களுக்கு அழைத்து சென்றனர்.