மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள்-மத்திய அரசுவெளியிட்டது
1 min read
33 questions to be asked in the census – Central Government released
23.1.2026
இந்தியாவில் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் வரை வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
இதைத்தொடர்ந்து 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு வீடு வீடாக குடும்பங்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் பாலினம், வீட்டின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி குறித்த விவரங்கள், வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள், பயன்படுத்தப்படும் வாகனங்கள், அதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் உள்ளிட்டவை இந்த 33 கேள்விகளில் அடங்கும்.
மேலும், இந்த முறை கணக்கெடுப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.