June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

“அஜித்குமார் கொலையால் ‘மனம் பதறுகிறது”- நீதிபதி வேதனை

1 min read

“Ajith Kumar’s murder ‘heartbreaking'” – Judge anguished

4/2/2026
திருப்புவனம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27-ந் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, “யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனது பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்” என குறிப்பிட்டு வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *