கேரளாவில் பெண் மந்திரி மீது தாக்குதல்; மாணவர் காங்கிரசார் 5 பேர் மீது வழக்கு பதிவு
1 min read
Attack on woman minister in Kerala; Case registered against 5 members of Student Congress
26.2.2026
கேரளாவில் கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையத்திற்கு மதியம் வந்தார்.
அவர் வந்தே பாரத் ரெயிலில் ஏறுவதற்காக சென்றபோது திடீரென்று அங்கு வந்த காங்கிரஸ் கட்சியின் கண்ணூர் மாவட்ட மாணவர் அமைப்பு தலைவர் தலைமையில் மாணவர் அமைப்பினர், இளைஞரணியை சேர்ந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் பின்பு, மந்திரி வீணா ஜார்ஜ் சிகிச்சைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மந்திரியை தாக்கிய காங்கிரசின் இளைஞர் அணியினரின் செயல் அத்துமீறிய செயல், கண்டனத்துக்குரியது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் மந்திரி வீணா ஜார்ஜ் 4 மணிநேரம் சிகிச்சை பெற்றார். இதன்பின்னர் இரவு 8 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியானது. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய வேண்டும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், கழுத்தில் அவருக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்பதற்கான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதுபற்றி கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் கூறும்போது, மாணவர் காங்கிரஸ் பிரிவை சேர்ந்தவர்கள் அவரை தாக்கினர். இதனால், மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என கூறினார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கருப்பு கொடி போராட்டத்திற்கு தலைமையேற்ற கண்ணூர் மாவட்ட தலைவர் அதுல், பொருளாளர் அக்சய் மிட்டல் மற்றும் முபாஸ், பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் ஆகிய 5 பேர் மீது கண்ணூர் நகர போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்கள், மந்திரி வீணா ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் தொடர்ந்து முன்னேறி செல்லாமல் உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரை யாரும் நெருங்க முடியாத வகையில் போராட்டக்காரர்களை தனியே அழைத்து சென்றனர்.
இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அத்துமீறல் சம்பவத்திற்காக ரெயில்வே போலீசாரும் அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.