வள்ளியூர்: கந்துட்டிக்காரருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
1 min read
Valliyur: Kanduttikar sentenced to 2 years in prison
3.3.2026
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு, வடக்கன்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், வள்ளியூரை சேர்ந்த சுடலை கண்ணன் (வயது 45) என்பவர் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளியான சுடலை கண்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங் நேற்று குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் (தற்போது டி.எஸ்.பி., திருப்பூர் மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த தலைமை காவலர் பரமசிவன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆலன் ராயன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.