June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிலவில் ஒரு தளம் அமைக்கிறது

1 min read

India and the US are jointly building a base on the moon

9.4.2026
அமெரிக்கா நாசாவின் ஆர்டெமிஸ்-2 மற்றும் இந்தியாவின் சந்திரயான்-3 ஆகிய இரண்டும் நிலவைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய படிகளாகும். ஆனால் அவற்றின் வழிமுறைகளும், நோக்கங்களும் முற்றிலும் வேறுபட்டவை. சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி மூவர்ணக் கொடியை ஏற்றிய அதே வேளையில், ஆர்டெமிஸ்-2 மனிதர்களை நிலவின் ‘பின்பக்கத்திற்கு’ அழைத்துச் சென்று ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

ஆர்டெமிஸ்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகியவை விண்வெளிப் பந்தயத்தோடு நிலவை அடைவதோடு நின்றுவிடவில்லை. நிலவின் மிகவும் சவாலான பகுதிகளை யார் சிறப்பாக ஆராய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கான போட்டியாக இது மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றுள்ளன. ஆனால் இதுவரை இந்தியாவும், அமெரிக்காவும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

நாசாவின் ஆர்டெமிஸ்-2 விண்கலம் தற்போது நிலவின் மறுபக்கத்தை அடைந்து அதன் மீது பறந்தபோது, அது உலகமே பேசும் பொருளாக மாறியது. ஆனால், நாசாவிற்கு முன்பே, இந்தியாவின் இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் தனது கொடியை நட்டது.

குறிப்பாக, இந்தியாவின் சந்திரயான்-3 கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியது. இது நிலவின் மிகக் குறைந்த சூரிய ஒளியைப் பெறும் பகுதியாகும். இங்குதான் நீர் (பனிக்கட்டி வடிவில்) இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கடினமான பகுதியில் மென்மையாக தரையிறங்கிய உலகின் முதல் நாடு இந்தியா ஆகும். இந்தியாவிற்கு முன்பு பல நாடுகள் இங்கு தரையிறங்க முயற்சித்தன. ஆனால் அனைத்தும் தோல்வியடைந்தன.

நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்டம் சற்று வித்தியாசமானது. இந்தத் திட்டம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்காது. மாறாக மனிதர்களுடன் நிலவைச் சுற்றி வந்து திரும்பும். இந்த விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்று, நிலவு சுற்றுப்பாதையை நிறைவு செய்யும். பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் பின்பகுதி வழியாக இந்த விண்கலம் கடந்து சென்றது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இது பூமியிலிருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 773 கி.மீ. பயணித்து மிக நீண்ட தூரத்திற்கான சாதனையையும் படைத்தது.

தென் துருவம் என்பது நிலவின் கீழ்ப்பகுதி (துருவம்) ஆகும். இங்குள்ள பள்ளங்கள் மிகவும் ஆழமானவை. வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும். சந்திரயான்-3 இந்தப் பகுதிக்குச் சென்றது. நிலவின் மறுபக்கம் ‘இருண்ட பக்கம்’ என்றும் அழைக்கப்பட்டாலும், அது முற்றிலும் இருண்டதல்ல. அது பூமியை எதிர்கொள்ள முடியாத ஒரு பகுதியாகும். ஆர்டெமிஸ்-2 விண்வெளி வீரர்கள் இந்த மர்மமான பகுதிக்கு மேலே பறந்துள்ளனர்.

இஸ்ரோவின் சந்திரயான்-3 முற்றிலும் ரோபோக்களால் இயக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதில் மனிதர்கள் யாரும் பயணிக்கவில்லை. அதன் முக்கிய அங்கங்களாக இருந்த ‘விக்ரம் லேண்டர்’ மற்றும் ‘பிரக்யான் ரோவர்’ ஆகியவை நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை நடத்தின. அதே போல், நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒரு குழுவினரைக் கொண்ட திட்டமாகும். 4 விண்வெளி வீரர்கள் ஒரு விண்கலத்தில் நிலவின் மறுபக்கத்திற்குப் பயணம் செய்தனர். மனிதர்கள் நீண்ட காலத்திற்கு நிலவில் வாழ்வதற்கு உதவும் உயிர் ஆதரவு அமைப்புகளைச் சோதிப்பதே இதன் நோக்கமாகும்.

சந்திரயான்-3, ஆர்டெமிஸ்-2 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. குறிப்பாக சந்திரயான்-3 திட்டத்தை இந்திய அரசு ரூ.615 கோடியில் நிறைவேற்றியது. இது பல ஹாலிவுட் திரைப்படங்களின் பட்ஜெட்டை விடக் குறைவு. ஆனால் நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்டத்திற்கு ரூ.34 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முழு சந்திரயான் திட்டத்தை விட 17 மடங்கு அதிக செலவாகும். சந்திரயான்-3 நிலவின் மண் மற்றும் அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி நமக்குத் தெரிவித்தது. ஆனால், எதிர்காலத்தில் ஆர்டெமிஸ்-3 திட்டத்தின் மூலம் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும்போது நாசா எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள இது உதவியது. நாசாவின் இந்தத் திட்டத்தின் நோக்கம், அதன் ஓரியன் விண்கலம் மற்றும் எஸ்.எல்.எஸ் ராக்கெட் ஆகியவை மனிதர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானவை என்பதைச் சோதிப்பதாகும்.

விண்வெளிப் பந்தயத்தில் இந்தியா இனி ஒரு பார்வையாளராக மட்டும் இல்லை. இஸ்ரோவும் நாசாவும் இப்போது “ஆர்டெமிஸ் உடன்படிக்கைகளின்” கீழ் இணைந்து செயல்படுகின்றன. சந்திரயான்-3ல் இருந்து பெறப்பட்ட தரவுகளை நாசா பயன்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து நிலவில் ஒரு தளத்தை அமைக்கத் தயாராகி வருகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *