செங்கோட்டை அருகே வாலிபரை வெட்டிக் கொன்று உடல் கிணற்றில் வீச்சு
1 min read
Youth hacked to death near Sengottai, body thrown into well
19.4.2026
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமி மகன் சுபாஷ் (வயது 22). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ம் தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், அன்று மாலை திடீரென காணாமல் போனார். அவரை தேடிய நிலையில் அன்று இரவில் கதிரவன் காலனி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் சுபாஷ் வெட்டுக்காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது கை, கால்களும் கட்டப்பட்டு இருந்தன.
போலீஸ் விசாரணையில் சுபாசை அவரது நண்பர்களே கொலை செய்து உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது. அதாவது சுபாசுக்கும், அவருடைய நண்பர்களான இரட்டைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வம்(27), செங்கோட்டை மேலூரைச் சேர்ந்த தனசங்கர்(26) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கும் சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து சுபாஷ் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
தற்போது விடுமுறையில் சுபாஷ் வந்ததை 3 பேரும் அறிந்தனர். அவர்கள் அழைத்ததின்பேரில் கதிரவன் காலனி பகுதிக்கு சுபாஷ் சென்றார். அங்கு 3 பேரும் மதுகுடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சுபாஷை மதுகுடிக்க கட்டாயப்படுத்தியதாகவும். ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சுபாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் கை, கால்களை கட்டிப்போட்டு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இந்த கொடூரக் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், தனசங்கர், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.