திருட்டு வழக்கில் 3 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
1 min read
3 people jailed for 6 years in theft case
25.4.2026
கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே தண்ணீர்பந்தல் முதல் அரசடிபனையூர் வழியில் உள்ள ஒரு தனியார் குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 85 பட்டாணி பருப்பு மூடைகளை திருடிச் சென்ற வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 35), ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்களான பரமசிவன்(35) மற்றும் அந்தோணிராஜ்(35) ஆகிய 3 பேரையும் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்சொன்ன வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் மேற்சொன்ன மாரிச்செல்வம், பரமசிவன் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றதற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாணி மூட்டைகளை திருடியதற்காக தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுதீர் மற்றும் இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் தளவாய்ராஜ் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.