ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி
1 min read
Crop loans up to Rs. 75,000 fully waived.
16.6.2026
கூட்டுறவு வங்கிகளில் ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்.
தமிழக அரசு ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. அதற்கு மேல் கடன் இருப்பவர்களுக்கு, வெவ்வேறு விதமான தள்ளுபடிகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அரசின் அறிவிப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும், வாக்குறுதி அளித்தபடி முழுவதும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் கோரி வந்தனர்.
இந்நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும் குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரமும் பணப்பயன் கிடைக்கும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
- 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி
- 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி
- 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி
14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடித்தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.