சிகிச்சை அளிக்க இயலாததால் மனைவியை கொன்ற கணவர்
1 min read
Husband kills wife due to inability to provide medical treatment.
4.7.2026
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ் (வயது 62) அமுதா (வயது 60) தம்பதியினர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக மனைவி அமுதா பாத்ரூமில் வழுக்கி கீழே விழுந்ததில் கால் பாதிப்புக்குள்ளாகி சரிவர நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முதியவர் கோவிந்தராஜ் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் மனைவிக்கு உரிய சிகிச்சை கொடுத்து அவரை கவனிக்க முடியாத நிலையும் இருந்துள்ளது.
வயதான தம்பதியர் இருவரும் அன்றாட உணவை கூட சமைத்து உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று முதியவர் கோவிந்தராஜ் மனைவி அமுதாவின் தலையில் சுத்தியலால் தாக்கியதுடன், கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்பு அவர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்ட அமுதாவால் உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இருவரும் ஒருவேளை உணவிற்காக கஷ்டப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மன விரக்தி அடைந்த கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.