“புதிய அமைச்சர்களை தூக்கிப் பிடித்துதான் விடவேண்டும்; கீழ அழுத்தக்கூடாது”- அண்ணாமலை பேச்சு
1 min read
“We must uplift the new ministers; we should not pull them down” Annamalai
13.7.2026
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில், நேற்று கோவை பொள்ளாட்சியில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-
பொள்ளாட்சியில் உங்களை பார்க்கும்போது எதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தோமோ, 50% அதற்கான பாதையை நாம் தாண்டிவிட்டோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இயக்கம் தொடங்கி இன்றுடன் 38 நாட்கள் ஆகின்றன. இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் இணைந்துள்ளனர்.
நான் யாரையுமே தனியாக தொடர்புகொண்டு இதில் இணையுங்கள் என்று சொல்லவில்லை. இன்றும் எந்த அழைப்பும் இல்லாமல் இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளீர்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள், நல்லது செய்ய தயாராக இருக்கிறார்கள், வாய்ப்புக்காக மட்டும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொள்ளாட்சியின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் மாநாடு பறைசாற்றுகிறது.
நம் வேலையின்மூலம் மக்கள் வரவேண்டும். 50 லட்சம் எண்ணிக்கை இயக்கத்திற்கு வரும்போது, தமிழ்நாடு மக்கள் நம்மை அழைக்கிறார்கள் என்று பொருள். மக்கள் மனம்வைத்தால் 1 மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை வரும். ஆனால் அது தானாக நிகழவேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.
மாற்றத்திற்காக துணைநிற்கிறேன் என்றும் வரும்போது மட்டும்தான் நிரந்தரமாக ஒரு நல்ல சமூகத்தை கட்டமைக்க முடியும். அடுத்த ஆறு மாதத்திற்கான இலக்கு நம்மிடத்தில் இருக்கிறது. இம்மாதம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வுக்கான மாதம். அடுத்த மாதம் சுற்றுசூழலுக்கான மாதம்.
50 லட்சம் மரக்கன்றுகள் நம் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நடவேண்டும். இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை சுத்தப்படுத்த வேண்டும். நதிநீரை சுத்தப்படுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு பற்றியது. அடுத்தது குழந்தைகள் நலன். ஆறு மாதங்களும், ஆறு முக்கிய பிரச்னைகளை கையிலெடுத்து வீ தி லீடர்ஸ் அமைப்பு செயல்படவேண்டும்.
தனிமனிதனாக நீங்கள் செயலபட்டால் நிச்சயம் மாற்றம் நிகழும். மக்கள் தன்னெழுச்சியாக வருவார்கள் என்பதை இன்று பொள்ளாட்சி பார்த்துள்ளது.
திருச்செந்தூர் வரும் 26ம் தேதி பார்க்கும். தமிழ்நாட்டின் பல பகுதிகளும் இதைபார்க்கும். நல்லவர்களுக்கான வாய்ப்பையும், மேடையையும் கொடுக்கவே வீ தி லீடர்ஸ் அமைப்பு உள்ளது.
இன்று 19 லட்சம் பேரில் 17% பெண்கள் இருக்கின்றனர். இது நமது முதல் வெற்றி. ஆனால் இது 50ஆக வேண்டும். அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக வெறும் 5% மட்டுமே பெண்கள் இருப்பர். அதுபோல 14% 18 முதல் 25 வயது உடையவர்கள். 26 முதல் 39 வயதுவரை 40% பேர் இருக்கின்றனர். இது ஒரு இளம் அமைப்பு. மொத்தமாக 54% பேர் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்.
இளைஞர்களின் குரல்களை நாம் கேட்கவேண்டும். இவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இவர்கள் 2026-ல் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031-ல் மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத்தான் போகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவர்கள் படித்தவர்கள், நேர்மையானவர்கள், சமுதாயத்திற்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்தவர்கள். இன்னும் 5 ஆண்டுகள் நமக்கு உள்ளது. ஒவ்வொரு சமுதாய பணியையும் நாம் செய்ய செய்ய மக்கள் நம்மிடம் வருவார்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது:-
“இது அரசியல் மாநாடு இல்லை. இன்னொரு கட்சியை திட்ட, இன்னொரு தலைவனை குறைசொல்ல இந்த மாநாடு இல்லை. ஆட்சிக்கு ஒருவர் வந்துள்ளார், அவருக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு இல்லை.
இந்த மாநாடு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டு வந்துள்ளது. நிறையபேர் கேட்கிறார்கள், தவெகவை வெளுத்துவிட சொல்லி.
2026-ல் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓட்டுப்போட்டு இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதற்கு மரியாதை கொடுக்கவேண்டியது நமது கடமை. இவர்கள் யாரும் அனுபவ எம்.எல்.ஏக்கள் கிடையாது. செங்கோட்டையனைத்தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சர்கள்.
புதியவர்களை தூக்கிப் பிடித்துதான் விடவேண்டுமே தவிர, கீழ அழுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆணவத்தோடு இந்த அமைப்பை நாம் ஆரம்பிக்கவில்லை. அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நாம் இங்கு இல்லை.
நல்ல சமுதாயம், நல்ல தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இங்கு இருக்கிறோம். விஜய்யை இனிமேல் சிஎம் சார் எனவே அழைப்போம். அவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது கல்லூரி, பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என தெரிவித்தார்.
717 கடைகளை மூடியதாகவும் அறிவித்தார். ஆனால் நாம் செய்த கள ஆய்வில் இன்னும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் 100 மீட்டருக்குள் உள்ளது. இதையும் பேசுங்கள். இந்த அமைப்பு மூலம் ஒரு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட, ஆரோக்கியமான வழியில் அதை வலியுறுத்த வேண்டும்.
ஆணவத்தோடு யார் அரசியல் செய்தாலும், அவர்களை தமிழ்நாடு மண் விடாது என்பதற்கு 2026 தேர்தல் சாட்சி. அதனால் நம் வேலையை செய்வோம். நமக்கு எந்த குழப்பமும் வேண்டாம். இது கண்டிப்பாக ஆரோக்கியமான அரசியல் கட்சியாக மாறத்தான் போகிறது.
2031-ல் தமிழ்நாடு மக்கள் முன்பு நம் கட்சி நிற்கும். ஆரோக்கியமான அரசியலுக்காக நிற்போமேதவிர, அற்ப, அதிகார அரசியலுக்காக அல்ல. இன்னும் சிறப்பாக காட்டுவோம், சிறப்பாக கொடுப்போம் என்ற அரசியலைத்தான் செய்வோம். அதற்கான வாய்ப்பை மக்கள் தருவார்கள்.
இந்த தவெக அரசு முடியும்போது தமிழ்நாட்டின் கடன் ரூ.15 கோடியாக இருக்கும். அதனை நாம்தான் தீர்க்கப் போகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.