இமாச்சலில் கார் மீது பாறைகள் விழுந்து 13 பேர் பலி
1 min read
13 killed as rocks fall on car in Himachal
24.7.2026
இமாச்சலில் பாறைகள் உருண்டு விழுந்ததில் கார் முற்றிலும் நசுங்கி, அதில் பயணித்த 13 பேர் பலியாகினர்; இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இமாச்சல பிரதேசத்தின் குல்லுவில் இருந்து கில்லார் நோக்கி, ‘டாடா சுமோ’ கார் நேற்று சென்றது. இதில் 15 பேர் பயணித்தனர். உதய்ப்பூர் – பாங்கி சாலையில் கார் சென்றபோது திடீரென பாறைகள் உருண்டு கார் மீது விழுந்தன. இதில் கார் முற்றிலுமாக நசுங்கியது.
காரின் பின்பகுதியில் தீப்பற்றியதால் பயணியர் வெளியேற முடியாமல் தவித்தனர். அங்கிருந்தவர்கள் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த ஆறு மாத குழந்தை உட்பட 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பாறை உருண்டு விழுந்தபோதே காரில் இருந்த இருவர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முதல்நாள் ஏற்பட்ட நிலச்சரிவால் உதய்ப்பூர் – கில்லார் ரோடு மூடப்பட்டது. இதனால் திண்டி என்ற இடத்தில் பயணியர் தங்கினர். நேற்று மீண்டும் அந்த சாலை திறக்கப்பட்டதை அடுத்து பங்கி நோக்கி புறப்பட்ட போது விபத்தில் சிக்கி பலியாகினர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.