நடுவானில் திடீரென 300 அடிகள் சரிந்த ஏர் இந்தியா விமானம்- பயணிகள் அலறல்
1 min read
Air India flight suddenly drops 300 feet mid-air – passengers scream.
5.8.2026
தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379), நடுவானில் திடீரென கடுமையான காற்றுப் கொந்தளிப்பில் (டர்புலன்சில்) சிக்கியதால் 300 அடி உயரத்தை உடனடியாக இழந்தது.
இந்த எதிர்பாராத விபத்தில், விமானப் பணிப்பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . மொத்தம் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று காலை பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த, ஏர்பஸ் A320 என்ற குறுகிய வடிவ விமானம் கடுமையான வான்வழிச் சுழற்சியில் சிக்கியது.
அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டைச் சற்றே இழந்து, நொடிப்பொழுதில் 300 அடி கீழே சரிந்தது.
விமானம் திடீரென சரிந்தபோது, உள்ளே இருந்த சில பயணிகளும், பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் விமானத்தின் மேல் கூரையில் பலமாக மோதி தூக்கி வீசப்பட்டனர். இதனால் விமானத்தினுள் பெரும் பதற்றமும் பயமும் ஏற்பட்டது.
இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையிலும், விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பே அவசர மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். காயமடைந்த அனைவருக்கும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளும் அவசர சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
இதில் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து இந்தியாவின் தலைமை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வான்வழிச் சுழற்சி ஏற்படுவதற்கு முன்பாக விமானிகளுக்கு ஏதேனும் எச்சரிக்கை கிடைத்ததா அல்லது இதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.