பௌத்தர்களுக்கு ரூ.5,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்- தென்காசி ஆட்சியர் தகவல்
1 min read
Buddhists can apply for a ₹5,000 subsidy – Tenkasi Collector announces.
18.8.2026
தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமியில் விஜயதசமி நாளன்று நடைபெறும் தர்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவதற்காக, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டு நாக்பூர் பயணம் மேற்கொண்டு மானியம் பெற விரும்பும்பௌத்தர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, 15.11.2026-க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:
ஆணையர்,சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம்,சேப்பாக்கம், சென்னை – 600 005.
எனவே, தகுதியுடைய பௌத்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.