August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தொழில் தொடங்க பெண்களுக்கு கடன் உதவி- அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு

1 min read

‘Singappenn’ loan scheme worth Rs 7,015 crore – Minister Gandhiraj announces.

20.8.2026
சிங்கப்பெண் கடன் திட்டம் ரூ.7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் வ.காந்திராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களை தொழில் முனைவோராக்க புதிதாக சிங்கப்பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரித்து, லாபத்தை உயர்த்த வெற்றி என்ற பொதுவான வணிகச் சின்னம் (லோகோ) அறிமுகப்படுத்தப்படும்.

மாநில கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் குறைந்தபட்சம் 5 சேவைகள் வழங்கும் சங்கங்களாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். ரூ.6.90 கோடி மதிப்பீட்டில், 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் நுண் தானியங்கி சாதனங்கள் நிறுவப்படும். கூட்டுறவு இயக்கத்தினை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த, பெருமளவிலான உறுப்பினர் சேர்க்கை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், இணைய உறுப்பினர் சேர்க்கை வலைத்தளம் மூலம் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்திட ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும். மஞ்சள், முருங்கை மற்றும் மிளகு ஆகிய விளைபொருட்கள் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்படும். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும். 10 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை நடைமுறைகள் விரிவுபடுத்தப்படும்.

கூட்டுறவுத்துறையின் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு வலைத்தளம் மற்றும் கூட்டுறவு செயலி உருவாக்கப்படும். தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகளுக்கு, நீண்டகால கடன் வழங்கும் திட்டம் ரூ.50 கோடி அளவிற்கு மீண்டும் தொடங்கப்படும். டான்பெட் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை ரூ.2,500 கோடி அளவிற்கு அதிகரிக்கப்படும்.

புதிதாக 150 ரேஷன் கடை பணியாளர் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 82 கூட்டுறவு நிறுவனங்களில் நிறுவப்படும். கூட்டுறவு கடன் அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் குறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்யப்படும். வேளாண் விளைபொருள் ஈட்டுக் கடன் ரூ.115 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக அதிகரித்து வழங்கப்படும்.

தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக புதிய ஏலக்கூடம் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டம் ஆய்க்குடியில் அமைக்கப்படும். 50 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு ஏலமுறை விரிவுபடுத்தப்படும். இயற்கை வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை முதற்கட்டமாக 2 மாவட்டங்களில் கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் உயிரி உரங்கள் டான்பெட் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும்.

நெல் உலர்த்தும் கருவி
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நெல் உலர்த்தும் கருவியுடன் கூடிய வசதி மையங்கள் நடத்திட கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் முதல், ரேஷன் கடைகள் வரை அனைத்து செயல்பாடுகளையும் பரீட்சார்த்த முறையில் ஒரே முகமை வாயிலாக நடத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கூட்டுறவு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கிணைத்து, வழங்கல் தொடர் மேலாண்மை ஏற்படுத்த ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வறிக்கை தயாரிக்கப்படும். புதிய சேமிப்புக் கிடங்குகளின் தேவை, சேமிப்புக் கிடங்குகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த திட்ட அறிக்கை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *