August 26, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பரவும் பன்றிக்காய்ச்சல்- சுகாதாரத்துறை எச்சரிக்கை

1 min read

Swine flu spreading in Tamil Nadu – Health Department issues warning

26.8.2026
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, எச்1என்1 வகையைச் சேர்ந்த பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும். மேலும் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்தவொரு மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி, உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே இத்தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *