ராஜஸ்தான் பூங்காவில் புலி தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு
1 min read
Sanitation worker dies after tiger attack in Rajasthan park
2/9/2026
ராஜஸ்தானில் உள்ள பூங்காவில் புலி தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஆரவள்ளி மலைத்தொடர் பகுதியில் நஹர்கர் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, மான் என பல்வேறு வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த பூங்காவில் சுகுனா என்ற பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று புலி அடைக்கப்பட்டிருந்த கூண்டை தூய்மைப்படுத்த சென்றுள்ளார். பொதுவாக தூய்மை பணியின்போது புலியை பூங்கா ஊழியர்கள் வேறு கூண்டுக்குள் மாற்றிவிடுவார்கள். ஆனால், இன்று புலி அதே கூண்டுக்குள் இருந்துள்ளது. இதை அறியாத சுகுனா கூண்டை சுத்தப்படுத்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த புலி சுகுனாவை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகுனா அலறி துடித்துள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்ட பூங்கா ஊழியர்கள் விரைந்து சென்று புலியை விரட்டி விட்டு சுகுனாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சுகுனா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.