மனைவியாக இருந்தாலும் சிறுமியுடன் தாம்பத்யம் வைப்பது குற்றம்- ஐகோர்ட்டு கருத்து
1 min read
Engaging in sexual relations with a minor is a crime, even if she is one’s wife – High Court observation.
4.9.2026
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு புதிய ஆடை வாங்கி தருவதாக வாலிபர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி, தனது காரில் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்காமல், இருவீட்டார் கலந்து பேசி அந்த வாலிபருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
இதை அறிந்த மன்னார்காடு போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை திருமணம் செய்த வாலி பரை கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் அந்த வாலிபர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் தான் செய்தது குற்றம் அல்ல. இரு வீட்டார் ஒப்புதலுடன் தான் சிறுமியை திருமணம் செய்து கொண்டேன். எனவே, தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தனி அமர்வு நீதிபதி ஜோபின் செபஸ்டின் விசாரித்தார். அவர் கூறியதாவது:-
தனிநபர் சட்டத்தை விட போக்சோ சட்டத்திற்கு தான் முன்னுரிமை கூடுதலாக உள்ளது. சிறுமியை திருமணம் செய்து பாலியல் அத்துமீறல் செய்தபோது, அவருக்கு வயது 17 ஆண்டு ஒரு மாதம்தான் என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் குற்றம் செய்துள்ளார். அத்துடன் சிறுமியின் பெற்றோரும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. முஸ்லிம் மதமாக இருந்தாலும், சிறுமிக்கு 18 வயதிற்கு கீழே உள்ள போது தனிநபர் சட்டங்கள் வழக்கில் செல்லுபடியாகாது. போக்சோ வழக்கில் இருந்து மனுதாரரை விடுவிக்க முடியாது.
இவ்வாறு கூறினார்.
இதனைஅடுத்து மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. மனைவியாக இருந்தாலும், 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தாம்பத்யம் வைப்பது போக்சோ சட்டப்படி குற்றம் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.