இந்திய எல்லையில் சீனா படைகளை குறைத்தது- மத்திய அரசு தகவல்
1 min read
China has reduced troops at the Indian border – Central Government statement.
15/9/2026
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இந்திய ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.
உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோதலை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கு கூடுதல் படைகளை குவித்தன. இதனால் பல மாதங்களாக அங்கே பதற்றமும், பரபரப்பும் நீடித்தது. அத்துடன் இருநாட்டு உறவுகளும் சீர்குலைந்தது.
எனவே இந்த பதற்றத்தை தணித்து எல்லையில் அமைதியை நிரந்தரமாக்கும் நோக்கில் இரு தரப்பினரும் அடுத்தடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், அடுத்தடுத்து சந்திப்புகள் நிகழ்ந்தன. அத்துடன் எல்லை மோதல்களை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகளும் அவ்வப்போது சந்தித்து பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அங்கே படைகளை திரும்பப்பெறவும் வலியுறுத்தினர்.
இவ்வாறு நடந்த சந்திப்புகளால் இரு நாட்டுக்கு இடையேயான உறவுகள் மீண்டும் துளிர்த்தன. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு மந்திரிகள் மட்டத்திலும் பின்னர் தலைவர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடந்தது.
அந்தவகையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதன் பின்னரும் இருதரப்பு ராணுவ மட்டத்திலான சந்திப்புகள் நடந்தன.
இதில் கிழக்கு லடாக்கில் படைகளை திரும்பப் பெற சீனாவிடம் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து நடந்த சந்திப்புகளால் நடந்த இருதரப்பு உறவு முன்னேற்றத்தை தொடர்ந்து எல்லையில் இருந்து சீனா படைகளை கணிசமாக குறைத்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.
அந்தவகையில் சீனாவுடனான இந்தியாவின் வடக்கு (லடாக்) எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இருந்து சீனா கணிசமான அளவுக்கு படைகளை கடந்த ஆண்டு குறைத்து இருப்பதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது அந்த எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சீனாவின் பாரம்பரிய பயிற்சிப்பகுதிகளில் 10 ஒருங்கிணைந்த ஆயு தப்படைப்பிரிவு அளவிலான படைகள் மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
அதேநேரம் இந்திய ராணுவத்தின் படைகள் அனைத்து நிலைகளிலும் எத்ததகைய எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்கும் வகையில் வலுவாகவும், நன்கு சமநிலையுடனும் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.