பொன்னேரி அருகே ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்
1 min read
Woman delivers baby in auto-rickshaw near Ponneri
18.9.2026
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆட்டோவில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர். இவரது மனைவி கீர்த்தி (வயது 22). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணமானது. இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திக்கு, எண்ணூரை சேர்ந்த சுந்தரின் சகோதரி கலைச்செல்வி வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடத்தியுள்ளனர். இதன்பிறகு அங்கேயே தங்கியிருந்தார்.
நேற்று காலை கீர்த்திக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக கணவர் சுந்தர், உறவினர்கள் ஆகியோர் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். கத்திவாக்கம் மேம்பாலம் அருகே செல்லும்போது வலி அதிகமானதால் ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவிலேயே கீர்த்திக்கு பெண் குழந்தை பிறந்தது.
உடனடியாக கீர்த்தியையும் குழந்தையையும் அன்னை சிவகாமி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர் அங்கிருந்து தாயையும் குழந்தையையும் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.