திருப்பதியில் விஐபி டிக்கெட் அதிக விலைக்கு விற்ற 5 பேர் கைது
1 min read25.2.2020
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விஐபி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 5இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் மக்கள் பிரதிநிதிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மத்திய-மாநில அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களை வைத்து விஐபி தரிசனம் செய்யப்படுகிறது.
இந்த தரிசன டிக்கெட்டுகளை சில இடைத்தரகர்கள் பெற்று ₹3 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள், போலீசார் நேற்று நடத்திய சோதனையில் மகாராஷ்டிராவை சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினரிடம், அவர்களது உறவினர் வருவதாக கூறி சிபாரிசு கடிதத்தை பெற்று விஐபி தரிசன டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். பின்னர் ஒரு டிக்கெட் ₹3,500க்கு விற்பனை செய்துள்ளனர் என தெரிய வந்தது.
இதுகுறித்து அறங்காவலர் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிகிஷோர் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் இவருடன் சேர்ந்து ஜனார்த்தனன், ஜெகதீஸ்வர், தாமோதரன், மற்றொரு தாமோதரன் ஆகிய 5 இடைத்தரகர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக உள்ள இடைத்தரகர்களான திருப்பதியை சேர்ந்த நாகராஜ், புருஷோத்தம், திருப்பதி, நாகார்ஜுனா, உதய பாஸ்கர், தியாகராஜன், பாஸ்கர், யோகநாத் ஆகியோர் விரைவில் கைது செய்வோம் என்று திருமலை முதலாவது நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகன்மோகன் தெரிவித்தார்.