கிராமப்புறங்களில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிப்பு
1 min read26.2.2020
சென்னை: தமிழக கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
நகர்ப்புறங்களை விட கிராமங்களில் நீரிழிவு(சர்க்கரை) நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தானியங்கள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எம்.டி.ஆர்.எஃப். ஸ்காட்லந்து டண்டீ பல்கலைக்கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
தமிழக கிராமப்புறங்களில் சர்க்கரை நோய் மற்றும் அதன் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான டெலிமெடிசின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 8 ஆயிரம் பேருக்கு நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சர்க்கரை நோய்களின் எண்ணிக்கை 4.9 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பவர்களில் 45 சதவீதம் பேர் அதிக உடல் பருமனுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாறி வரும் உணவு மற்றும் வாழ்க்கை முறையே சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளம் வயதினருக்கு கூட சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் இருப்பது ஆய்வில் தெரிய வந்திருப்பது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிராமப்புற மக்களிடையே, நோய் கண்டறிதல், வழக்கமான சோதனைகள் மற்றும் தொற்று நோயற்ற நோய்களான குறிப்பாக சர்க்கரை நோயை தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது.
ஆதலால் கிராம மக்களிடையே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.