டிரைவர், கிளீனரை அடித்து உதைத்த சுங்கச்சாவடி ஊழியர்கள் -6பேர் கைது
1 min read26.2.2020
மினிவேன் ஓட்டுநர் மற்றும் கிளீனரை சரமாரியாகத் தாக்கிய சுங்கச் சாவடி ஊழியர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லைச் சேர்ந்த ஓட்டுநர் ஜகதீஷ். இவர் மினி வேனில் சரக்கு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். பெங்களூரு அருகே உள்ள ஹத்திப்பள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த ஜகதீஷ், சுங்க கட்டணத்தை ஃபாஸ்டேக் மூலம் செலுத்த முயன்றுள்ளார்.
ஆனால் அப்போது ஃபாஸ்டேக் செயல்படவில்லை. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணத்தை கட்டச் சொல்லி கூறியுள்ளனர்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் ஃபாஸ்டேக் வேலை செய்த நிலையில், தானாகவே கட்டணம் பெறப்பட்டதால் மினிவேன் புறப்பட்டிருக்கிறது. அப்போது மினிவேன் மோதியதாக கூறி சுங்கச்சாவடி பெண் ஒருவர், வேன் ஓட்டுநரை தாக்கியிருக்கிறார். பதிலுக்கு ஓட்டுநர் ஜகதீஷும் அந்தப் பெண் ஊழியரை தாக்கியிருக்கிறார்.
இதனால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியிருக்கிறது. இந்நிலையில் சுங்கச் சாவடியில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் அனைவரும் இணைந்து ஓட்டுநர் மற்றும் கிளீனரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் அவர்களை அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கம்பியால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ஓட்டுநரும், கிளீனரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து சுங்கச் சாவடி ஊழியர்கள் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.