கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் குண்டு வீசிய வாலிபர்
1 min read26.2.2020
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவருக்கு சொந்தமான மாங்காய் குடோன் தாண்டிக்குடி சாலையில் அழகர்பொட்டல் என்ற இடத்தில் உள்ளது. கடந்த 23ம் தேதி நள்ளிரவில் மாங்காய் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து ரத்தினகுமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாங்காய் குடோன் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், வாலிபர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிந்தது. பாட்டிலில் பெட்ரோல் வாங்கிச் சென்றவர் அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்த ராஜாங்கம்(24) என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் ராஜாங்கம் தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசினார் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘‘அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்த கொத்தனார் ராஜாங்கத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணம் முடிந்து குழந்தை உள்ள ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. கள்ளக்காதலி வீட்டிற்கு இரவு நேரத்தில் அவர் சென்று வந்துள்ளார். கடந்த 23ம் தேதி இரவில் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இதனால் அவரால் யாருக்கும் தெரியாமல், கள்ளக்காதலியின் வீட்டிற்குள் நுழைய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ராஜாங்கம் மாங்காய் குடோன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். பின்னர் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். தீப்பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள் குடோனை நோக்கி ஓடியுள்ளனர். இதையடுத்து கள்ளக்காதலி வீட்டிற்குள் ராஜாங்கம் ஜாலியாக நுழைந்துள்ளார்’’ என்று தெரிவித்தனர்.
கள்ளக்காதலியை சந்திக்க குடோன் மீது வாலிபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.