புண்ணியம் செய்ய பணம் தேவையில்லை, நல்ல மனம் இருந்தால் போதும்
1 min read
புண்ணியம் என்பது என்ன?
நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது.மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்யவேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்லமனம் ஒன்றேபோதும் புண்ணியம் செய்வதற்கு.
ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை. உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம்.
மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள். உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக்கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்கமுடியும் என்று எண்ணுங்கள்.
உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னலமற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவவிடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.
உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகிவிடும். அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள், அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்துசேரும். இந்த புண்ணியச்செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன? ஒன்றுமில்லையே. பைசாகூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.
சரி, இதை எப்படி செயல்வடிவத்திற்கு கொண்டுவருவது என்பதை பார்ப்போம். இதை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவது மிக எளிது. தினமும் ஏதேனும் ஒருநேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணுங்கள்.
இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. எந்தநேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்வீர்கள்.
நாட்கள் செல்லச்செல்ல, நீங்கள் கேள்விப் பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்லமுறையில் வாழ நீங்கள் எண்ணத்துவங்குவீர்கள். நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர்பற்றி கவலைப்படாதீர்கள். அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்லமுறையில் வாழ, நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். ஆம்புலன்ஸ் வண்டிச்சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்லமுறையில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால், அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள். மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச்செயலை செய்யுங்கள்.
தெருவோரம் ஒருமரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக்கொள்ளுங்கள். அந்த மரத்தை வெட்டியவர், மேலும் சில மரங்களை நடட்டும் என்று. வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று. உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள்.ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
மிகப்பெரிய புண்ணியம் உங்களை வந்துசேரும்.
இப்படியெல்லாம் செய்யமுடியுமா? என்றால் நிச்சயம் செய்யமுடியும். இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்யவேண்டியது எதுவும் இல்லை.ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப்பெரிய புண்ணியம்.
எனவே, புண்ணியம் செய்ய பணம் ஏதும் தேவையில்லை, நல்ல எண்ணங்களுடன் கூடிய, நல்ல செயல்கள் உடன் கூடிய மனம் இருந்தால் போதும்.