கொரோனா பரவல்; மதுரை சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வந்தது
1 min read- Corona spread; Madurai came under the control of the health department
31/3/2020
கொரோனா பரவல் காரணமாக மதுரை அண்ணாநகரை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பரப்பளவு சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு மைக்ரோ பிளான் மூலம் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோன இந்தியாவையும் பாதிப்படைய வைத்து உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை (செவ்வாய்க்கிழமை) 1417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆகிவிட்டது. சென்னையில் மட்டுமே 24 பேரும், ஈரோட்டில் 19 பேரும், சேலத்தில் 6 பேரும் மதுரையில் 6 பேரும் கோவையில் 5 பேரும் விழுப்புரத்தில் 3 பேரும், வேலூரில் 2 பேரும் விருதுநகரில் ஒருவரும், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, கரூர், தஞ்சை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவல் இதுவரை 47 பேர் இறந்து உள்ளனர்.
மதுரையில் மைக்ரோ பிளான்
மதுரையில் 3 பேரை கொரோனா பாதித்த நிலையில், மதுரையை சேர்ந்த 54 வயதானவர் பலியாகி இருக்கிறார். அவரது மனைவி, மகனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் பரவல் என்னும் 2-வது கட்டத்திற்கு கொரோனா வந்துவிட்டது.
சமூகப்பரவல் நிலையை அடைந்தால் இத்தாலி நாட்டின் நிலை நேரிடும்.
இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை ‘மைக்ரோ பிளான்’ ஒன்றை தயாரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கண்காணிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி, மதுரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
அப்பகுதியை மையப்புள்ளியாக வைத்து, சுற்றியுள்ள வண்டியூர், கோமதிபுரம், யாகப்பா நகர், மேலமடை உட்பட 5 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை நேற்று மாநகராட்சி சுகாதாரத்துறை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.
இதற்கு ‘கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இம்மண்டலம் 250 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒரு சுகாதார பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 4 பணியாளர்களுக்கு பொறுப்பாளராக ஒரு டாக்டர் இருப்பார். 250 பகுதி வீடுகளுக்கும் சென்று குடும்பத்தினருக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா என பரிசோதிக்கின்றனர். கொரோனா அறிகுறி இருந்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஏற்பாடு செய்கின்றனர்.
இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஒரு சுகாதாரப் பணியாளர் தினமும் தலா 50 வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்வார். இதன் மூலம் நிச்சயம் கொரோனா சமூகப்பரவலாவதை தடுக்கலாம்,” என்றார்.