May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஆகுமா? அதிகாரிகளிடம் கருத்து கேட்கிறது அரசு

1 min read
Cancellation of Class X exams?

1.4.2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?: அதிகாரிகளிடம் கருத்து கேட்கிறது அரசு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு கருத்து கேட்டு உத்தரவிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பாடத்திட்டங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்புக்கான சில பாடங்களுக்கு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த தேர்வுகளும் ஏப்ரல் 15ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் இம்மாத இறுதிக்குள் முழு கட்டுப்பாட்டில் வரும் என்பது சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால் உடனே தேர்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, மே மாதம் 2ம் வாரத்தில் இருந்துதான் தேர்வை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் மறுகட்டமைப்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அதிபட்ச நிதி தேவையும், காலஅவகாசமும் தேவைப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டு மட்டும் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவருக்கும் தேர்ச்சியை அறிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அதேநேரத்தில், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்யலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் அரசு தரப்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்கருத்துக்களை மாவட்ட வாரியாகவும் பெற்று தரும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் இதுபோன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டதா? அப்போது எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதையும் ஆய்வு செய்து கருத்துக்கள் தெரிவிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.