சினிமா தொழிலாளர்களுக்கு நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி உதவி
1 min read
4.4.2020
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமாதொழிலாளர்களுக்கு நயன்தாரா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து திரைப்படம், சீரியல், விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பெஃப்சி அமைப்பில் உள்ள 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் அவர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நிதியுதவியும், அரிசி மூட்டைகளும் வழங்கி உதவினர். அந்த வரிசையில் தற்போது நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார்.
தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக நயன்தாரா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கை கொடுத்து உதவிய நல்ல இதயம் கொண்ட சகோதரி நடிகை நயன்தாராவுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.