நெல்லையை சேர்ந்தவர் திருப்பூரில் கொலை
1 min read
கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி
12.4.2020
நெல்லை மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் (45). இவர் திருப்பூரில் கட்டிட கூலி வேலை செய்து வந்தார். வீரக்குமார் திருப்பூர் பல்லடம் ரோடு சந்தைபேட்டை அம்மா உணவகம் அருகில் கடந்த 6ம் தேதி வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருப்பூர் தெற்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக திருப்பூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த கவுதம் என்பவர் தனிப்படையினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து வீரக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவத்தன்று கவுதம் மது குடிக்க தனது நண்பர்கள் 5 பேரை அழைத்துள்ளார். ஊரடங்கையொட்டி மது கிடைக்காததால் கவுதம், மது வைத்திருந்த வீரக்குமாரிடம் மது கேட்டுள்ளார். அப்பாேது வீரக்குமாருக்கும், கவுதமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வீரக்குமார் மூட்டை தூக்கும் கொக்கியால் கவுதமின் முதுகில் கிழித்துவிட்டார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருந்த கவுதம் தனது நண்பர்களான திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (18), அணைமேட்டை சேர்ந்த மனோஜ் (23), ஆலங்காட்டை சேர்ந்த முகமது ஹரிஸ்(25), விசு(எ) விஸ்வநாதன் (24) ஆகியோருடன் சேர்ந்து வீரக்குமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் வீரக்குமாரை கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.