உணவு வழங்க தடை செய்ய வேண்டாமே
1 min read
Do not ban food

உணவு வழங்க தடை செய்ய வேண்டாமே
14/4/2020
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் சில மாநிலங்கள் இந்த மாதம் முழுவதும் நீட்டித்துள்ளன. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு ஏப்ரல் 30-ந் தேதி விரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கை மீறுவோர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு கண்டிப்பாக தேவை. இந்த ஊரடங்கை பெரும்பாலான மக்கள் கடைபிடித்தாலும் பலர் கடை பிடிப்பதில்லை. கடைகளுக்கு கும்பலாக செல்லுவதை சில இடங்களில் பார்க்க முடிகிறது. குறி்ப்பாக ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதை காண்கிறோம். இது மாபெரும் தவறு. ஞாயிற்றுக்கிழமைதான் இறைச்சி சாப்பிட வேண்டுமா? வேறு நாளில் சாப்பிடலாமே?
சில மாவட்டங்களில் இரண்டு வண்ண அட்டைகளை கொடுத்து குறிப்பிட்ட நாளில்தான் கடைக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுவும் நல்ல முடிவு.
உணவுப் பொருட்கள்
இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டது நல்லதுதான் என்றாலும் நடுத்தர மக்களும், அடி மட்டத்து மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. பெரு்ம்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த நிறுவனங்கள் தங்களுக்கு வருமானம் இல்லாத பட்சத்தில் எப்படி சம்பளம் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறது. சில பெரிய நிறுவனங்கள் கூட சம்பளம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பல தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.
இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உணவுப் பொருளை தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். தற்போது ரேஷனில் இலவசமாக அரசி, பருப்பு முதலியவை வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் சில குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு கூடுதலாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்.
ரேஷன் கடை இல்லாமல் பலர் இருக்கிறார்கள். ரேஷன் கடை இருந்தும் தொழில் நிமித்தமாக வெளியூர்களில் சிக்கி தவிப்பவர்களும் உண்டு. அவர்களின் நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
சுகாதார த்துறையினர் வீடுதோறும் வந்து, காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா ஏன்று ஆய்வு செய்கிறார்கள். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வந்துவிடுகிறார்கள். அவர்கள் மூலம் கஷ்டப்படும் குடும்பத்தையும் கணக்கு எடுத்து உதவ முன் வரவேண்டும்.
தற்போது தனியார் நேரடியாக உதவி வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அரசு விளக்கம் அளித்துள்ளது. தனியார்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல் இப்படி உணவுப்பொருட்களை வழங்குவது சீராக இருக்காது. உணவுப் பொருட்கள் முறையாக எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்காது. ஒரே இடத்து மக்களே பயன்பெறும் நிலைகூட உருவாகலாம். அரசின் மேற்பார்வையில் தி.மு.க. உள்பட சமூக நல அமைப்புகள் உதவி வழங்கினால் எலோருக்கும் உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.
இந்த உதவிகூட ஒரே இடத்தில் வைத்து வழங்காமல் வீடுதேடி சென்று வழங்க வேண்டும். பலர் நடு ரோட்டில் வரிசையில் நின்று அல்லது கூட்ட நெரிசலில் நின்று வாங்க விரும்ப மாட்டார்கள்.
சமைத்த உணவு
அரசு சமைத்த உணவு வழங்க தடை விதித்து உள்ளது. சமைத்த உணவு வழங்குவது நகரங்களில் பயனுள்ளதாக இருந்தது. காரணம் பலர் தொழிலாளர்கள் குடும்பத்தை சொந்த ஊரில் விட்டுவிட்டு இவர்கள் மட்டும் நகரங்களில் தங்கி உள்ளனர். குறிப்பாக தனியார் செக்யூரிட் அமைப்பு மூலம் பணிமுடியும் காவலாளிகள் பலர் சொந்த வீடுகளுக்கு செல்ல முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் இலவச உணவு பெற்று வயிரை நிரப்பிக் கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இப்படி வழங்கும் சமைத்த உணவை நேரம் பாராமல் உழைக்கும் போலீசார் கூட வாங்கி சாப்பிடுகிறார்கள். எனவே உணவு வழங்குவதை தடை செய்யக்கூடாது.
அதேநேரம் உணவை பரிசோதிக்க சுகாதாரத்துறையில் வரவேண்டும்.உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைத்துவிட்டால் பொதுமக்களை வீட்டுக்குள் முடங்க வைக்கலாம். கொரோவையும் விரட்டிவிட்லாம்.