தெலுங்கானாவில் மே 7-ந் தேதி வரை ஊடரங்கு நீட்டிப்பு
1 min read
Curfew extension in Telangana till May 7

20/4/2020
தெலுங்கானாவில் மே 7-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்குமாறு அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, தெலங்கானாவில் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும், மே 3-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு பின்னர் அறிவித்தது.
நீட்டிப்பு
இந்த நிலையில் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மே 7-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் வெளியிட்டார். மேலும் அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு மேற்கொண்டதன் விளைவாக கட்டுப்பாடுகளுக்கு எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு குறிப்பிட்ட சில துறைகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான வழிமுறைகளை வழங்கியிருந்தாலும், அதற்கான முடிவை மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு தளர்வுகள் இருக்காது. இது குறித்து சந்திரசேகர ராவ் கூறும்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கிற்கு 95 சதவீத மக்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
2 பேர் பலி
சந்திரசேகரராவ் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி தெலங்கானாவில் நேற்று புதிதாக 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன்மூலம் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 858 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த தகவலை முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்தார்.