மானசீக மகள்-14 / தொடர்கதை / கண்ணம்பி ஆ.ரத்தினம்
1 min read
Maanaseega Magal- Novel By Kannambi AA.Rathinam
(முன்கதை- செல்வனும் ரோசியும் காதலித்து மதம் காரணமாக தோல்வி கண்டார்கள். அதன்பின் ரோசி பிரகாசை திருமணம் செய்தாள். அவர்களது மகன் பாரதி. செல்வன் நித்யாவை மணந்தான். அவர்களுக்கு மகிழ் என்ற மகள். பாரதியும் மகிழும் மனதார ஒருவரையொருவர் விரும்பினர்கள். இது ரோசிக்கு தெரிய வர…)
மகனிடம் கேட்டுவிடலாமா? கணவனிடம் சொல்லி
விடலாமா, நித்யாவிடம் பேசிவிடலாமா என்றெல்லாம் கேள்விக் கொக்கிகள் அவள் கண்முன் தொங்கின.
நாட்கள் நகர்ந்து ஓடின.
தனது கேள்விகளுக்குப் புள்ளிவைத்துவிட்டு,
செல்வனிடமே இதுபற்றிப் பேசிவிடலாம் என்று முடிவு செய்தாள்.
செல்வனுக்கு போன் செய்தாள். “இன்று என் கணவர் வெளியூர் போயிருக்கிறார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வரமுடியுமா” என்றாள்.
‘நித்யாவையும் அழைத்து வருகிறேனே’ என்று பதில் குரல் ஒலித்தது.
‘வேண்டாம். நீங்க மட்டும் தனியாக வாங்க. உங்ககிட்ட நிறைய பேசணும்’ என்றாள் ரோசி.
காலம் கடந்த நேசமா? யோசித்தான் ‘சரி வர்றேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
மாலையில் ரோசி செல்வனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். சொன்னபடி செல்வன் வந்து சேர்ந்தான்.
இருக்கையில் அமரச்செய்து காபி கொண்டு கொடுத்தாள்.
மகன் வரைந்து வைத்திருந்த ஆல்பத்தை எடுத்து வந்து செல்வனிடம் நீட்டினாள்.
செல்வன் அதை வாங்கிப் புரட்டிப் பார்த்தான்.
மகளின் படங்கள் பல பரிமாணங்களில் பளிச்சிட்டதைக் கண்டு வியப்படைந்தான்.
“யார் வரைந்தது உன் கணவர் சிறந்த ஓவியராயிற்றே… அவரது கை வண்ணமா?”
“இல்லை…”
“வேறு யார் இப்படித் தத்ரூபமாக வரையமுடியும். இவ்வளவு நடன நளினங்களோடு” என்று கேட்டான் செல்வன்.
ரோசியின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனச் சிந்தியது.
“இது என்ன கண்ணீர் தேவையில்லாமல்” என்று அழுத்தமாகக் கேட்டான்.
கடந்த காலம் அவள் நெஞ்சைத் தாக்கியது.
“அன்று உங்களை நான் மறந்ததற்கு, இன்று என் மகன் பழிதீர்க்கிறான்.”
“என்ன சொல்றே… குழப்பாதே விவரமாகச் சொல்லு” என்றான் செல்வன்.
“பாரதிதான் வரைஞ்சிருக்கான். கடைசியில் என்ன எழுதியிருக்கான் பாருங்க.”
பக்கங்களை நகர்த்தி கடைசிப் பக்கத்தில் பார்வையைப் பதித்தான்.
“என் உயிர் மகிழ்”
அப்படியே நிமிர்ந்து ரோசியின் முகத்தில் ஓடிய ரேகைகளைக் கண்களால் படம் பிடித்தான். அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தான்.
“விதி விளையாடுது. நீ என்ன பண்ணலாம்னு நினைக்கிறே” இது செல்வனிடமிருந்து பிறந்த கேள்வி.
“நீங்கதான் சொல்லணும்.” இது ரோசியின் வாயில் மலர்ந்த பதில்.
தொடர்ந்து பேசினாள் ரோசி.
“ஒருநாள் பாரதி செல்போனை வீட்ல வச்சிக்கிட்டு ரிக்கார்டிங் போயிட்டான். அன்னைக்கு மகிழ் ஒரு எஸ். எம். எஸ். செய்திருந்தாள். “உங்கள் பாட்டு ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவாகிறது. ஆனால் உங்கள் அழகும் பேச்சும் என் நெஞ்சில் பதிவாகிவிட்டது” என்று. இதிலிருந்து ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்கன்னு நல்லா தெரியுது. நம்ம ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வர்றதுதான் நல்லதுன்னு தோணுது” என்று சொல்லி முடித்தாள்.
அதற்கு மேல் செல்வன் அங்கே இருப்பதற்கு விரும்பாமல் கிளம்பிவிட்டான்.
செல்வன் வீடு வந்தடைந்தான். நித்யா மலர்ந்த முகத்துடன் வாசலில் நின்றுகொண்டிருந்தாள். வழக்கமான மலர்ச்சி இல்லாமல் மவுனமாகவே வீட்டினுள் நுழைந்தான் செல்வன்.
நித்யாவுக்கு மனத்தில் சுருக் என்றது. ஒருநாளும் இப்படி இறுக்கமான முகத்துடன் இருக்கமாட்டாரே… இன்று என்ன வந்தது என்று யோசித்தாள்.
ஸோபாவில் அமர்ந்திருந்தவனின் அருகில் போய் அமர்ந்தாள்.
“ஆபீஸ்ல எதாவது பிரச்சினையா?” மெதுவாக வார்த்தைகளை உதிர்த்தாள்.
“ஆபீஸ்ல ஒண்ணும் பிரச்சினை இல்ல. வீட்லதான் பிரச்சினை கிளம்பியிருக்கு.”
“என்ன பிரச்சினை. நான் ஏதாவது தப்பு செய்தேனா?
“நீ ஒண்ணும் செய்யல்ல. உன் அருமை மகள் மகிழ்தான்…”
“அவ என்ன தப்பு செய்தாள்… அவ குழந்தையாச்சே.”
“ஆமா… ஒண்ணும் தெரியாத பாப்பா. ஆனா… வார்த்தைகளால எஸ். எம். எஸ் அனுப்ப மட்டும் தெரியும்.”
“யாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினா.”
“ரோசி மகன் பாரதி”
“அதுவா… அதப்பத்தி உங்ககிட்ட பேசலாம்னுதான் ஒவ்வொரு நாளும் நினைச்சேன். முடியாம போச்சு.”
“எதைப் பத்தி.. .”
“ஒண்ணுமில்ல… ஒருநாள் மகிழ் மறந்து போனை வச்சிட்டுப் போயிட்டா. கறண்ட் இல்லாம என் போனில சார்ஜ் இல்ல. உங்களுக்கு அவசரமா ஒரு போன் போட மகிழ் போனை எடுத்தேன். அப்போ அதுல நாலு மிஸ்ட்கால் இருந்தது. அந்த நம்பருக்கு போன் போட்டேன். “மகிழ் கண்ணா” அப்படின்னு ஒரு ஆண்குரல். உடனே போனை கட்பண்ணி வச்சிட்டேன். மகிழ் வந்ததும் அது யாருன்னு கேட்டேன். விம்மி… விம்மி அழுதாளே தவிர பதில் ஏதும் சொல்லல்ல. கடைசியா அந்தப் பையன் படத்தை எடுத்துக் காட்டி, என்னைக் கட்டிப்புடிச்சி அழுதா… எனக்கு எல்லாம் புரிஞ்சிபோச்சு. நேரம் காலம்
பார்த்து உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.” சொல்லி முடித்தாள்.
வாசலில் ரோசியும் ரோசியின் கணவர் பிரகாஷூம் வந்து நின்றார்கள்.
வழக்கம்போல் இல்லாமல் மவுனமாக வரவேற்றார்கள் நித்யாவும் செல்வனும்.
“என்ன… மவுனம் நிலவுது. எல்லாம் கேள்விப்பட்டேன். இனி அது சம்பந்தமாக கேள்விகளை எழுப்பிக்கிட்டேயிருக்கக் கூடாது. அவங்க ரெண்டு பேர் மனசுல அன்பு வளர்றதுக்கு நாமளும் காரணமாகத்தான் இருந்தோம். காலேஜூக்கு ரெண்டுபேரையும் ஒண்ணா அனுப்பினோம். கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிச்சோம். விருந்து விழாக்கள்ல ரெண்டு குடும்பமும் சந்திச்சோம். அது சின்னஞ் சிறுசுகள் மனசில காதலாக வளர்ந்திருக்கு. நாங்கள் பெண் கேட்டு வரத் தயாராக இருக்கிறோம். நீங்க தயாரா என்கிறத எதிர்பார்க்கிறோம்.”
“உங்களுக்கு மதம் பிடிச்சிருக்கா” செல்வன் அழுத்திப் பேசினான்.
“யானைக்குத்தான் மதம் பிடிக்கும். எங்களுக்கு ஏன் மதம் பிடிக்குது” பிரகாஷின் கேள்வி இது.
“சரி உங்களுக்கு மதம் பிடிக்கல்லன்னா… இந்தக் கல்யாணம் நடக்காது.”
“அப்படின்னா…” இது ரோசியின் கேள்வி.
“எங்க மதம் உங்களுக்கு பிடிக்குதான்னு கேட்டேன்.”
“எங்களுக்கு எம்மதமும் சம்மதம்” பிரகாஷ் – ரோசி கோரஸ் குரல் இது.
“எங்களுக்கும் எம்மதமும் சம்மதம்”, செல்வனும் நித்யாவும் கோரஸ் பதில் கொடுத்தார்கள்.
“ஏன் கேக்கிறேன்னா… சாதி மதம் இந்த ரெண்டும்தான் காதலுக்குச் சதியா இருக்கு. முகூர்த்தம் கோயிலேயா சர்ச்லேயா?”
“பதிவாளர் அலுவலகத்தில்” – பிரகாஷ். “அதுதான் சரி… அப்படியே செய்வோம்”- செல்வன்.
பாரதி – மகிழ் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மகிழுக்கு பாரதி மோதிரம் அணிவித்தான். பாரதிக்கு மகிழ் மோதிரம் அணிவித்தாள்.
ரோசியின் கண்களும் செல்வனின் கண்களும் ஒன்றை யொன்று கவ்விக்கவ்வி, காலம் அவர்களின் கைகளில் போட்டுக் கொண்டிருக்கும் கணக்கைக் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துக் கொண்டிருந்தன. காலத்தின் கணக்குக்கு விடை காண்பது அவ்வளவு எளிதல்ல என்பது இருவருக்கும் புரிந்து கொண்டிருந்தது.
“நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ ஆசைப்பட்டோம். நமது பிள்ளைகள் கணவன் – மனைவியாக வாழ்வதற்குக் காலம் தடம் அமைத்திருப்பதை நினைத்தால் மனிதனுக்குப் புரியாத புதிர்கள் எத்தனையோ இருக்கின்றன” என்பதை உணர்ந்துகொண்டிருந்தார்கள்.
விழாவில் ரோசியின் கையில் செல்வன் கயிறு கட்டி சகோதரியாக்கிக்கொள்ளும் சடங்கும், செல்வனின் கையில் ரோசி கயிறு கட்டி சகோதரியாக்கிக்கொள்ளும் சடங்கும் நடத்தப்பட்டது. அதேபோல் நித்யா கையில் பிரகாஷ் கயிறு கட்டி சகோதரியாக்கிக்கொள்ளும் சடங்கும், பிரகாஷ் கையில் நித்யா கயிறுகட்டி சகோதரனாக்கிக்கொள்ளும் சடங்கும் நடத்தப்பட்டது.
கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக்கொள்ள நினைத்த ரோசியின் கையில் கயிறுகட்டி சகோதரியாக்கிக்கொள்ளும் நிலைமை செல்வனுக்கு வினோதமாகத்தான் இருந்தது.
காலத்தின் கட்டளைக்குத் தலையசைத்து வைப்பது மனிதனின் கடமையாகிவிட்டதை நினைத்து அவன் மனதில் அன்பு அலைகள் எழும்பிக்கொண்டிருந்தன.
ரோசியின் உடல்கவர்ச்சி அவனைச் சபலப்டுத்தாமல் இல்லை. இருப்பினும் அதை ஒளியுடம்பாக, ஒளியுறுப்புகளாகக் கற்பனை செய்து ரோசியை ஒரு உயர்ந்த இடத்தில் அமர்த்தினான். அவளிடமிருந்து ஒளிப்பிரகாசம் வீசுவதுபோல் தனது மனதை ஒளிப்பெட்டகமாக மாற்றிக்கொண்டான்.
ஒளிக்குள் ஏழு நிறங்கள் உள்ளன. ஆனால் வெண்ணொளி மட்டும்தான் வெளியில் தெரிகின்றது. செல்வனுக்குள் எத்தனை எண்ணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வெண்ணொளிக்குள் புதைத்து ரோசியின் மீது சகோதர பாசம் பொழிந்தான்.
பாரதி – மகிழ் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது.
குறித்த நாளில் திருமணம் மிகவும் சிக்கனமாக நடைபெற்றது
(தொடரும்)