June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பயம் – சிறுகதை – எழுதியவர் முத்துமணி

1 min read

Illustration of running dog

Payam – Short story By Muthumani

 “அச்சம் என்பது மடமையடா” என்று மெல்லிய குரலில் பாடியவாறு வழக்கமான பாதையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பயத்தை மறைப்பதற்கு தான் பாட்டு.    

இது என்ன ஐயோ… நாய்.

 நாய்என்றாலே எனக்கு ரொம்ப பயம் அதிலும் ராத்திரி 10 மணி… எல்லாரும் தூங்கிட்டாங்க தெருவே அமைதியாக கிடைக்கு 3 அடி கூட நகர முடியாத தெரு. அதுல நட்ட நடுவில் நிக்குது அடேங்கப்பா என்ன உசரம் அப்படியே நின்று விட்டேன்.

  இவ்வளவு பெரிய நாயை ஒரு நாளும் நம் தெருவில் பார்த்ததில்லையே. இது ஏதோ புது நாய். பார்த்தாலே மிகப்பெரியதாக இருக்கிறது.

கீழே கிடந்து எதையாவது எடுத்து எறியலாமா… எனக்கு பழக்கம் இல்லையே இருந்தாலும் குனிந்து பார்த்தேன்… அது நிமிர்ந்து பார்த்தது. உடனே முயற்சியை கைவிட்டு விட்டேன்.

திரும்பி பார்த்தது ஒரு எட்டு பின்னால் வைத்தேன். லேசாக குரைத்தது. குரைக்கிற நாய் கடிக்காது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதற்கு தெரியுமா என்று ஒரு சந்தேகம். லேசாக வாலை ஆட்டியது. நாய் இப்படி செய்தால் நம்மை யார் என்று சந்தேகப்பட்டுப் பார்க்கிறது என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. பக்கத்தில் போனால் தொலைந்தோம்.

 இந்த தெருவை விட்டுவிட்டு அடுத்தபடியாக கிழக்கு நோக்கிச் சென்று நம் தெருவை அடைந்து மீண்டும் மேற்கு நோக்கி நடந்தால் வீட்டை அடைந்து விடலாம். ஆனால் அதற்கு எவ்வளவு சுற்றி அலைய வேண்டும் என்று ஒரு சோம்பேறித்தனமும் வந்தது.

 பயமில்லாமல் முன்னேறிச் செல்ல முடியவில்லை. சுற்றி வரவும் எண்ணமில்லை. மெல்ல முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தேன். அது தன் காதை தூக்கி பார்ப்பது தெரிந்தது.

இப்போ போனால் காலை தூக்கி போட்டு கழுத்தை கவ்வி கால் கிலோ கறியை எடுத்துவிட்டு தான் விடும் என்ன செய்ய…

இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே…

அந்த நாய் திரும்பி அந்தப் பக்கம் பார்த்தது கீழே கிடந்த எதையோ வாயால் கவ்வ தொடங்கியது.

இதுதான் நல்ல நேரம் கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாக அதைத் தாண்டி ஓடி விட வேண்டியதுதான். என்ன கொஞ்சம் ஓரமாக ஓடவேண்டும் கடந்துவிட்டால் பின்னர் அடுத்தது நம் வீடு தானே வேறு வழி இல்லை

   கண்களை இறுக மூடிக்கொண்டேன். முருகா காப்பாற்று என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே வலது காலை டக்கென்று வேகமாக ஒரு எட்டு எடுத்து…

அவ்வளவுதான் ஒரே ஓட்டம் கண்மண் தெரியாமல் கிழக்கு நோக்கி என்னை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது அந்த நாய்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.