திருநீறின் அறிவியல் தத்துவம்
1 min read
Thiruneeru -The Philosophy of Science -.Muthumani
-முத்துமணி
=====
நீறில்லா நெற்றிபாழ் . நீறு என்பது சாம்பல். நீறு பூத்த நெருப்பு சாம்பல் மூடிய நெருப்பு. சாணத்தை எரித்துச் சாம்பலாக்கிக் கோவிலில் வைத்தால் அது திருநீறு ஆகிவிடுகிறது. விபூதி என்று வட மொழியில் சொல்வார்கள்.
கோவிலுக்குச் சென்றால் நாம் பெற்றுக் கொள்ளும் மிகப்பெரிய பொருள் அதுதான். அர்ச்சகர் கொடுத்தவுடன் ஆசாரக் கைநீட்டி பணிவோடு பெற்று நெற்றியில் பூசிக் கொண்டு நிறைய பேர் கோவில் தூண்கள் மேலேயே மீதியை வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். சில பேர் அந்த வேண்டாத வேலை செய்யவேண்டாம் என்று எண்ணி ,வாயைப் பொத்தி, கையைக் தலையைக் குனிந்து கொடுத்தால் அவரே தலையில் கொட்டி, நெற்றியில் பூசி விடுவார்.
அப்படித் திருநீற்றைப் பூசாத நெற்றி பாழாய்ப் போன நெற்றி என்பது தான் முன்னோர்வாக்கு. எனக்குத் தெரிந்து நெற்றி நிறைய திருநீறு அணிந்தவர்கள் திருமுருக கிருபானந்த வாரியார், குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற சிலர் மட்டுமே. அழகுக்காக அணியப் படுவதில்லை திருநீறு. நெற்றி முழுவதும் திருநீறு தீட்டப்பட்டு இருக்கவேண்டும். அதில் எத்தனைக் கோடு போடுவது என்பதெல்லாம் வேறு விஷயம். அவரவர் மத நம்பிக்கை சார்ந்தது. நான் சொல்ல வந்தது வேறு.
முருகன் பக்திப் பாடல்களில் ஒன்றைக் கேட்டிருப்போம் திருநீறில் மருந்திருக்கு தெரியுமா? திருநீரில் மருந்திருக்கு தெரியுமா?. கந்தன் திருநீரணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும். குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும். இதெல்லாம் பக்தியின் அடிப்படையில் ஏற்பட்ட நம்பிக்கை.
இங்கே ஒரு ஆழமான அறிவியல் இருக்கிறது. சாம்பல் ஈரத்தை ஈர்த்து தன்பால் வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. இதைக் கொஞ்சம் வேறு மாதிரி யோசிப்போம். ஜலதோஷம் பிடித்து விட்டது என்ன மருந்தை தேடுகிறோம் ? தொலைக்காட்சியில் விளம்பரம் எப்படி செய்கிறார்கள்? ஜலதோசமா மூக்கடைப்பா விக்ஸ் வேப்போரப் எடுத்துக்கொள்ளுங்கள்.அதை நெற்றி, தொண்டை, மார்பு ,மற்றும் முதுகில் தேயுங்கள். அப்படிச் செய்தால் ஜல தோசம் குணமாகிவிடும் என்று நம்புகிறோம்.
காலையில் குளித்ததும் கை நிறைய விபூதி எடுத்து நெற்றி, கழுத்து மார்பு, மற்றும் முதுகில் அணிந்து கொள்ளுங்கள். சளிப் பிடிக்காமல் பார்த்துக்கலாம். இதைச் சொன்னால் மூடநம்பிக்கை என்பார்கள்.
இப்போது திருக்கோவில்களில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கிறது. அதன் முன்னால் நின்று அழகாக கொஞ்சம் நெற்றியின் நடுவில் அங்குமிங்கும் நீண்டு விடாமல் பூசிவிட்டு, இரண்டு ஓரங்களையும் ஒற்றை விரலால் அழித்து அளவைச் சரி பார்த்துக்கொண்டு வருகிறோம்.
அறிவியலோடு இணைந்ததுதான் சடங்கு சாஸ்திரங்கள்.
-முத்துமணி