தண்டனை, ஆரஞ்சு மிட்டாய்- சிறுகதைகள் – முத்துமணி
1 min read
Thandanai and Aranch mittaai – Short stories By Muthumani
தண்டனை
வாரத்திற்கு ஒருநாள் மாலை நேரம், பெரும்பாலும் அவன் பிச்சை கேட்டபடி எங்கள் தெருவில் வந்து செல்வான். நான் வாசலில் அமர்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். தெருவின் தொடக்கத்தில் வரும்போதே அவன் கைத்தடியை ஊன்றி நடந்து வரும் சத்தம் டொக் டொக் என்று கேட்கும்.
பொதுவாக இரண்டு அழுக்குத் துணியுடன், இரண்டு மூன்று பிள்ளைகளைத் தன்னுடன் அழைத்து வந்து வறுமையைச் சொல்லும் சில பெண்கள், காவி கட்டி திருநீற்றுப் பட்டை அடித்துச், சுத்தமாகத் திருவோடு ஏந்தி வரும் ஆண்டிப் பண்டாரங்கள், இவர்களுக்கெல்லாம் நான் பொதுவாக இரக்கப் படுவதில்லை. கண் தெரியாதவர், கை கால் இல்லாதவர் என்றால் நம்மை அறியாமலே அவர்கள் மீது ஒரு இரக்கம் ஏற்பட்டு எதையாவது கொடுத்து அனுப்பி விடுவோம்.
நான் சொன்ன அந்தப் பிச்சைக்காரனுக்கு வயது 30க்குள் தான் இருக்கும். ஆனால் அவனுக்கு இடது கால் இல்லை. முட்டு வரை இருப்பதாகத் தோன்றுகிறது. அவன் வரும்போதெல்லாம் பத்து ரூபாய் கொடுத்து விடுவது என் வழக்கம்.
அவன் சென்ற பிறகு நீண்ட நேரம் என் சிந்தனையோட்டம் இவனுக்கு ஏன் ஒரு கால் இல்லை. நிச்சயம் இதற்கு பின்னால் ஏதாவது ஒரு சம்பவம் இருக்கும். பிறக்கும்போது அப்படித்தான் பிறந்தானா?. அல்லது இடையில் தான் கால் போயிருக்குமா?. அப்படி இடையிலே போயிருந்தால் விபத்தில் போயிருக்குமா?. ஒருவேளை ராணுவத்தில் பணிபுரிந்து எதிரிகளோடு, போராடி காலை இழந்தி ருப்பானா?. இப்படியே வெகுநேரம் எண்ணியபடி இருப்பேன்.
ஒரு நாள் அவன் வரும் சத்தம் கேட்டவுடன் இன்றைக்கு அவளிடமே கேட்டுவிட வேண்டியதுதான், என்று எனக்குத் தோன்றியது வந்தவனை “உட்கார்” என்று சொன்னேன். ஒன்றும் சொல்லாமல் தரையில் கஷ்டப்பட்டு உட்கார்ந்தான். கேட்டேன். ஒரு பதிலும் சொல்லாமல் கண் கலங்கினான். தேவையில்லாமல் கேட்டு விட்டோமோ? என்று என் மனம் வருந்திய போது, கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னான்.
சொந்த ஊர் மதுரைக்கு அருகில் ஒரு சிற்றூர். சிறுவயதிலிருந்தே கொஞ்சம் சேட்டை குணம் அதிகம். படிப்பு கிடையாது. ஏதாவது கூலி வேலைக்கு மனம் இல்லாமல் சென்று வருவது. இருபது வயதிலேயே ஒரு ஏழை வீட்டுப் பெண்ணைக் காதலித்து அவளையும் தன்னோடு அழைத்துச் சேர்த்துக்கொண்டது. அவனை நம்பி அவளும் கழுத்தை நீட்டியது.
அவன் என்ன வேலை செய்கிறான் என்று அவளுக்குத் தெரியாது. அவன் மதுரைக்குச் சென்று பிக்பாக்கெட், சிறிய திருட்டு, சின்னச்சின்ன வழிப்பறி என்று செய்து அந்த சம்பாத்தியத்தை, மதுரைக்கு சென்று வேலை செய்து கிடைத்த கூலி என்று கொண்டு வந்து கொடுப்பான். வீட்டுக்காரர் மதுரையில் ஏதோ கஷ்டப்பட்டு வேலை செய்கிறார் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாளுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவான். உள்ளூரில் இருந்தால் கூடதினசரி இரவில் வீட்டுக்குச் செல்வது கூட அவனுக்கு வழக்கம் இல்லை. நல்ல உடை அணிந்து சுத்தமாக இருக்க மாட்டான். பீடி, கஞ்சா, சாராயம் இப்படி எல்லா நல்ல பழக்கமும் உண்டு. அவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு தான் அவனோடு வாழ்ந்தாள். சம்பாதிக்கும் பணத்தைக் கூட முழுதும் அவளிடம் கொடுக்க மாட்டான். இன்னொரு பெண்ணோடு கூட பழக்கம் இருப்பது கூட அரசல் புரசலாக அவளுக்குத் தெரியும் அவனிடம் எதுவும் பேச முடியாது.
அந்த ஊரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஒரு ஊரில் இரண்டு பிரிவினருக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, ஏறத்தாழ பத்து நாட்களாக பஸ் எதுவும் ஓடவில்லை. உள்ளூரில் மேற்குத் திசையில் காட்டுப்பகுதியில் குளம் ஒன்று. அதன் கரையில் இருந்த மரத்தடியில் படுத்தபடி இவன் எதையோ குடித்துக் கொண்டிருந்தான்.
பத்து நாளாச்சு கை நமநமன்னு இருக்கு. கையில் பத்து பைசா கிடையாது. பஸ்ஓடவில்லை. உள்ளூரிலேயே நாம் கை வைத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. நாம் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த ஊரில் எவனுக்கும் தெரியாது. அதுக்காக எத்தனை நாளைக்குசும்மாவே அலைகிறது. சரக்கு வாங்க கூட காசு இல்லை.
அன்றைக்குச் சனிக்கிழமை இந்தக் குளத்தைத் தாண்டி ஒரு மைல் தூரத்தில் வாடியூர் இருக்கிறது. அங்கு ஒரு டூரிங் தியேட்டர் உள்ளது. பீடி சுற்றும் பழக்கம் உள்ள பெண்கள் சனிக்கிழமை சம்பளம் வாங்கினால் நடந்தே சென்று படம் பார்த்து வருவது வழக்கம். அவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். டூரிங் தியேட்டர்களில் ஏழு முப்பதுக்கு பிறகுதான் படம் போடுவார்கள்.
இந்தப் பக்கமா எவளாவது சினிமாவுக்குப் போனால் கழுத்துல கையில கிடக்கிறத அத்துட்டு ஓடிப்போயிடவேண்டியதுதான். லேசா இருட்டத் தொடங்கியது. தூரத்தில் சில பெண்கள் பேசிக் கொண்டே வருவது தெரிந்தது. ஒரு கூட்டம் சினிமாவுக்கு போகுது இவர்களில் யாரிடமாவது அத்துடலாம். கூட்டமா போறாளுக கொஞ்சம் கஷ்டம். யாருன்னு கண்டுபிடிச்சுவாளுக. தனியா அவளாவது வருவா. அந்தக் கூட்டம் இவனைக் கவனிக்காமல் பேசிக்கொண்டு கடந்து செல்ல, பின்னால் ஒரு பெண் ஒரு குழந்தையைத் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு வருவது இருட்டுக்குள் மங்கலாகத் தெரிந்தது. இவள் தான் சரியான. ஆள் குறுக்கே பாய்ந்து அவள் கழுத்தில் என்ன இருந்தாலும் அறுத்து விடுகிறேன்.
கழுத்தில் கை வைத்தான். “ஐயோ அம்மா” என்று கத்தினாள். ஒரே இழு இழுத்தான். செயின் கையில் வந்துவிட்டது. திரும்பிக் காட்டுப்பக்கம் ஓட முயலும் போது காலில் முயல் குட்டி போல ஏதோ ஒன்று மிதி பட்டது. இருட்டுக்குள் தெரியவில்லை ஒரே ஓட்டம் ஓடி விட்டான். விடிய விடிய காட்டுக்குள் இருந்தான். நல்லவேளையாகக் காலையில் பஸ் ஓடத்தொடங்கியது. முதல் பஸ்ஸில் ஏறி மதுரைக்குச் சென்று விட்டான்.
பத்து நாள் கழித்து தான் ஊர் திரும்பினான் பாக்கெட் நிறைய பணம் கை நிறைய தின்பண்டங்கள். பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற வழியிலேயே பலபேர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். நாம் செய்த வேலை என்னவென்று கண்டுபிடித்து விட்டார்களா? என்று நினைத்தான். பொதுவாக இவன் யாரிடமும் பேசுவதில்லை. பெரியவர் ஒருவர் “டேய் மணி இத்தனை நாளா எங்கடா போன?” எங்க வேலை பார்க்கிற?” என்ன விவரம்? என்று யாருக்கும் தெரியலே. முதல்ல வீட்டுக்கு போ” என்று சொல்லிட்டு போனார்.
தெருவுக்குள் நுழைந்ததும் சில பெண்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். வீட்டுத் திண்ணையில் இவனுடைய மாமனாரும் மைத்துனரும் அமர்ந்திருந்தார்கள். இவர்களுக்கு இங்கு என்ன வேலை ?. ஒட்டு உறவே கிடையாதே ,!என்னையும் இவரு மகளையும் ஒதுக்கி அல்லவா வைத்திருக்கிறார். அஞ்சு வருஷம் ஆச்சு. அவர்களை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டு உள்ளே போனான்.
அங்கு ஒரு தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த இவளுடைய மாமியார், இவனைப் பார்த்தவுடன் விம்மி விம்மி அழுதாள். ஒன்றும் புரியாமல் உள்ளே நுழைந்தான். ஒரு வராண்டா, ஒரு கூடம், ஒரு சின்ன கிச்சன் இதுதான் வீடு . வாடகை வீடுதான்.கூடத்தில் வெறும் தரையில் தலையை விரித்தபடி உண்ணாமல் உறங்காமல் எதையோ வெறித்தபடி படுத்துக் கிடந்தாள் அவன் மனைவி. இவளுக்கு என்ன ஆயிற்று? என்று நினைத்தபடியே குனிந்து அவளைத் தொட்டான் அசைவில்லை. “சாந்தி” என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவளிடம் எந்த அசைவும் இல்லை. சத்தம் கேட்டு கிச்சனிலிருந்து மனைவியின் தங்கை மாலதி வெளிப்பட்டாள். என்ன எல்லோரும் இருக்கிறார்கள்? என்று யோசித்தான். மாலதியின் இடது கையில் மாவு கட்டு போட்டு தொட்டில் போட்டு கொண்டு இருந்தது. பக்கத்து ஊரில் தான் அவள் வாழ்க்கை பட்டிருக்கிறாள்
அவள்தான் அழுதபடி சொன்னாள். “பையன் போயிட்டானே…”. அப்போதுதான் இவன் யோசித்தான், ஆமா ஒரு வயதான, நம்முடைய ஒரே பையன் செல்வம் எங்கே…?
“வேண்டாம் வேண்டாம் என்று சொன்னியே அக்கா! நான் தான் கேட்கல உன்ன பாக்கலாம்னு வந்தேன். பிள்ளையைத் தூக்கிட்டுச் போறேன் ன்னு சொன்னேன்.’ வேண்டாம் சின்னப் பைய ஆளுவான்ன்னு’ சொன்னியே கேட்காம நான்தான் தூக்கிட்டுப் போனேன். எவனோ ஒரு களவாணி கொலைகாரப் பய, கழுத்தில் கிடந்த என் செயினை அத்து புட்டான். கழுத்தில் ரத்தம் வலி தாங்க முடியாமல் பிள்ளைய கீழே போட்டுட்டேன். பச்ச பிள்ளையின் நடுவயித்தில் மிதித்துக் கொன்று விட்டானே நாசமா போவான். அன்னையிலிருந்து பித்துப் பிடித்த மாதிரியே கிடக்கிரியே அக்கா. எப்ப எந்திக்க போறே?”
எல்லாம் உடனே புரிந்து விட்டது. அன்று இடதுகாலில் மிதி பட்டது முயல் அல்ல . நான் பெத்த புள்ளை. பெத்த புள்ளையை மிதிச்சிக் கொன்ன கால் இருக்கலாமா? வேகமாக அடுப்பங்கரையில் நுழைந்தான். வீச்சரிவாள் வலது கையில். இடது காலை நீட்டி ஓங்கி ஒரே வெட்டு. மூட்டுக்கு கீழே முழங்கால் தனியாகத் தொப்பென்று தரையில் விழுந்தது.
அதன் பிறகு போலீஸ் கேஸ்,மருத்துவமனை என்று எல்லாம் முடிந்து, ஜெயிலுக்குப் போய் வெளியில் வர மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன .அதற்குள் நினைவு திரும்பாமலேயே செத்துப் போனாள் சாந்தி. உறவுகளும் ஒரேயடியாக முறிந்து போயின. “இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை.” தலையிலடித்துக் கொண்டு அழத் தொடங்கினான் மணி.
உண்மையிலேயே கேட்காமல் இருந்திருக்கலாமோ?. என்று எனக்கு தோன்றியது.
=====
2 ஆரஞ்சு மிட்டாய்

அப்பான்னு சொன்னாலே கண்டிப்புதான். இது சாதாரணம். எங்கப்பா அதிலும் ஸ்பெஷல். எனக்குக் கல்யாணமாகி ஒரு பையனும் இருக்கான். இன்னும் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்து பேச தைரியம் இல்லை. அப்படி ஒரு கண்டிப்பான ஆள்.
எனக்கு ஒரு அக்கா. பிறவியிலே ஊனம். மன வளர்ச்சியும் இல்லாதவள். அவள் பிறந்து பத்து வருஷம் கழிச்சு தான் நான் பிறந்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு என்னை அப்பா தன் தோளில் தூக்கியதில்லை. ஆனா தப்பு செஞ்சா தூக்கிப்போட்டு மிதிச்சிருக்காரு. அன்பாப் பேசியதில்லை. கனிவா ஒரு பார்வை பார்த்தது கூட இல்லை.
கோபம் மட்டும் பளிச்சுன்னு வரும். குறிப்பா எல்லாரையும் மரியாதையா பேசணும். வயசுல பெரியவங்களா இருந்தா அவங்க கிட்ட அதிகமா பேசக்கூடாது. இப்படியெல்லாம் ஒரு கொள்கை. நான் ஆறாம் வகுப்பு படிக்கிறபோது, தெருவில் ஐஸ் ஐஸ் என்ற சத்தம். வேகமாக ஓடிப் போய் “யோவ் ஐஸ்” ன்னு கூப்பிட்டேன். பின்னாலேயே வந்தவரு ஓங்கி பிடரியில் ஒண்ணு வச்சு “அவன் வயசு என்ன? உன் வயசு என்ன? மரியாதையா அண்ணாச்சின்னு கூப்பிடு” மூணு நாள் மண்டைவலி.
ஹைஸ்கூலில் என்னைச் சேர்த்த அன்னைக்கு, “வாத்தியார் எல்லாம் படிப்பு சொல்லிக் கொடுக்கிற கடவுள் எல்லாருக்கும் வணக்கம் சொல்லு” கும்பிட்டேன்.
“வாயைத் தெறந்து சொல்லு, காலில் விழு”. நான் வாத்தியார் யாரு பியூன் யாரு இன்னு வித்தியாசம் தெரியாமல் எல்லார் காலிலும் விழுந்து எந்திரிச்சேன்.
தன்னைவிட வயதில் சிறிய ஆட்களையம் சமயத்தில் “வாங்க போங்க”ன்னு தான் பேசுவார். வாடா போடா அவருக்கு ஆகவே ஆகாது. எதுத்த வீட்டு சுப்ரமணி என் கூட தான் படிக்கிறான். ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஸ்கூலுக்கு போவோம். ஒரு நாள் அவனிடம் “நல்லா படிக்கிறீங்களா?” அப்பா கேட்டார்.
“நல்லாத்தான் படிக்கிறோம். வாத்தியார்தான் லாயக்கு இல்லை”
“இனிமேல் அந்தப் பையனோடு பேச வேண்டாம் தனியா ஸ்கூலுக்குப் போயிட்டு வா “
என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டார்.
பஸ்சில் ஏறினாலும் “கண்டக்டர் சார் தென்காசிக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என்றுதான் கேட்பார் கண்டக்டருக்கு இவர் வயதில் பாதிதான் இருக்கும். எங்க அம்மா பிறந்த வீடு பக்கத்து வீடுதான். எப்பவோ எங்க தாத்தா ஏதோ சிறு மனஸ்தாபத்தில, ஒரு தகாத வார்த்தையை அப்பாவைப் பார்த்துப் பேசிட்டாராம். அவர் சாகிற வரை, இவர் அவரிடம் பேசவே இல்லை.
கல்லூரியில் சேர்ந்த நாள். பிரின்ஸ்பல் ரூமில், அவர் காலில் விழச் சொன்னார். கொஞ்சம் வெட்கமாய் இருந்தது. செய்யாமல் விட்டால் வீட்டைவிட்டுக் கூட விரட்டிடுவாரோ? என்ற பயத்தில் விழுந்தேன்.
எனக்குப் பெண் பார்க்க பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போது முழுக்க எனக்கு பாடம் நடத்தி இருக்கிறார். மாப்பிள்ளை முறுக்கைக் காட்டப்படாது. அவங்களும் படிச்சவங்க. கையெடுத்துக் கும்பிட்டு மரியாதையா பேசணும். யாரையும் குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது.
வார்த்தையால மத்தவங்கள காயப்படுத்தக்கூடாது .இது அவர் கொள்கையாக இருக்கும் போல. அம்மா ஒரு நாள் சொன்னாங்க. “சின்ன வயசிலிருந்தே அவர் இப்படித்தான்டா. அவரோட பிரண்டு வாசல்ல நின்னுகிட்டு இவர் பெயரைச் சொல்லி சினிமாக்கு வரியாடான்னு கேட்டுட்டு அடி வாங்கிட்டு போனார்”.
யாரையும் வாடா போடான்னு பேசவே மாட்டாரு. பேசவும் விடமாட்டார். உங்க அப்பா சின்ன வயசிலேயே அப்பா இல்லாமல் வளர்ந்தவர். அம்மா கூட சரியா கவனிக்கல. தனி மனுசனா நின்னு உழைத்தவர். அவர் பார்க்காத வேலையே இல்லை. அவரோட அம்மா அதுதான் உங்க பாட்டி, என்னோட மாமியார் நானே அவங்கள பார்த்ததில்லை. கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம பேசுவாங்களாம். புருஷனையே’ அவன் இவன் போடா வாடா’ இன்னும் சண்டை வந்தால் அதுக்கு மேல அசிங்கமாக கெட்ட வார்த்தை கூட பேசுவாங்களாம் ஊரே கூடி வேடிக்கை பார்க்குமாம். உங்க தாத்தாவை ஊரில யாரும் மதிக்க மாட்டார்கள். பொண்டாட்டிக்குப் பயந்தவன், பொட்ட பயன்னு கிண்டல் செய்வார்களாம். வசவு மட்டும்தான் வாங்கினியா? இல்ல அடியும் வாங்கினியா?. சின்னப் பையன் கூட அவரைக் கேலி பண்ணுவாங்களாம். வெளியே தலை காட்ட முடியாம மனசு உடைஞ்சு, அவங்க கையால சாப்பிட இடமில்லாமல், கஷ்டப்பட்டுச் செத்தும் போய்ட்டார். பிறகு அந்த அம்மாவும் போயிட்டாங்கன்னு சொல்லுவாங்க.
அப்போ உங்க அப்பாவுக்குப் பத்து வயசு இருக்குமாம் . பெற்ற தாயின் தகாத வார்த்தைகள்தான் அப்பாவின் சாவுக்குக்குக் காரணமாயிருந்து, தனக்கும் ஆதரவில்லாமல் ஆக்கிவிட்டது என்ற எண்ணம் அவர் மனசுக்குள் மாறாத வடுவா இறுகிப் போச்சு.அவருக்கு யாரும் யாரையும் மரியாதை இல்லாம பேசினா பிடிக்கவே பிடிக்காது.
“நீ எப்படிமா இவ்வளவு காலம் அப்பாவை சமாளிச்சே?”.
அது ஒரு பெரிய கதைடா. கல்யாணமான புதுசில் எல்லாரும் சொல்றாங்கன்னு நானும் ஆசையோடு ஒரு நாள் அவரை “அத்தான்”ன்னு கூப்பிட்டேன். கன்னம் வீங்கிப் போச்சு. அம்மா முகத்தில் சிரிப்பும் வெட்கமும் வந்தன. அவருக்குப் பிடிச்ச ஒரே வார்த்தை ‘என்னங்க’ மட்டும்தான். அம்மா இதைச் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே என் மனைவி உள்ள இருந்து டார்லிங் கூப்பிட்டா. நல்லவேளை அப்பா வெளியே போயிருக்காரு. இங்க பாரு இந்த டார்லிங் வாடா போடா எல்லாமே மெட்ராஸ்ல இருந்து வச்சுக்கோ. இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் என்னங்க மட்டும்தான். அம்மா சிரித்தாள்.
“கண்டிப்பா இருப்பாரே தவிர குடும்பக் கடமைகளை எல்லாம் சரியாத்தான் செஞ்சார்.” பயங்கர உழைப்பாளி எங்கப்பா, இப்ப வயசு 75. என் பையன் பிறந்து முப்பதாவது நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாச்சு. அவளும் டீச்சர். எனக்கும் லீவு கிடைக்கல. இன்னிக்கு பேங்க்ல பெரிய மேனேஜரா இருக்கேன். அதுக்குப் பின்னால எங்க அப்பாவோட உழைப்பு, கண்டிப்பு, வளர்ப்பு முறை எல்லாமே இருக்கு. ஒரு நாள் மாமனாரு, மாமியாரு, மச்சினன் மூணு பேரும் புள்ளைய பார்க்க வந்தாங்க.
அவள் வரவேற்றாள்.
“இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டு வாங்க வாங்க” இது எங்க அப்பா.
என்ன பாத்து “அவர் யாருடா? பொண்ணு கொடுத்த மாமனார் உனக்கு இன்னொரு அப்பா. வாயைத் திறந்து வாங்கன்னு சொல்ல மாட்டியா?”.
மேலும் ஒரு மாசம் அப்பா அம்மா கூட இருந்தோம். பிறகு சென்னையில் வீடு பார்த்துப் போயாச்சு. அப்பாவுக்கு அடிக்கடி இடது கால் இழுத்துட்டுப் போய்டும். எந்த மருத்துவம் பார்க்க மாட்டார்.
“சென்னையில் பெரிய பெரிய டாக்டர் இருக்காங்க. வாங்க பார்க்கலாம்” எதையும் காதில வாங்க மாட்டாங்க. அம்மா ஏதோ ஒரு எண்ணையைப் போட்டு தேச்சிவிட்டா சரியா போயிடும். தனக்குன்னு எதையும் இஷ்டப் படவும் மாட்டார். ஒரு நல்ல கட்டில் மெத்தை வாங்கித்தரேன் பா அதுல படுங்க. ஒரு பதிலும் பேசல.
“உங்க அக்கா ஒருத்தி இல்லன்னா நாங்களும் உன் கூடவே வந்து விடுவோம்”. அம்மா வருத்தப்பட்டா.
சென்னையிலேயே சம்பளத்துக்கு ஒரு பாட்டியை ஏற்பாடு செய்தாச்சு. உன் பிள்ளையை வளக்க, சோறாக்கிப் போட, உதவியா வந்திருக்காங்க. அவங்கள மரியாதையாப் பேசு மரியாதையா நடத்து வேலைக்காரின்னு நினைக்கக் கூடாது”. அப்பா எனக்கு சொன்ன அட்வைஸ்.
மூணு மாசத்துக்கு ஒரு தடவை அப்பா அம்மாவைப் பார்க்க வருவோம். ஆனா பையனையும் தூக்கிட்டுஅலைவது கஷ்டம்னு அவன கூட்டிட்டு வருவதே இல்லை. ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்தேன். வீடியோ காலில் பேரனைப் பாப்பாங்கன்னு பயன்படுத்தத் தெரியாமல் எங்கேயோ தூக்கிப் போட்டுட்டார். லேண்ட்லைன் போன் தான். எப்ப பேசினாலும் பையனுக்குப் பேச்சு வருதா? இரண்டு பேரும் கேப்பாங்க.
“சரியா பேச்சு வரலப்பா.” நான் சொல்வது பொய் தான். இப்போ அவனுக்கு இரண்டு வயசு ஆகுது. நல்லாத்தான் பேசுறான். ஆனால் பயலுக்கு மரியாதை தெரியல எங்க புடிச்சான்னு தெரியல. நாம என்ன சொன்னாலும் உடனே “போடா”ன்னு சொல்லுவான். எல்லோரிடமும் அப்படித்தான். எங்க அப்பா கொள்கைக்கு நேர் மாறாக இருக்கிறது.
ஒரு நாள் போன் போட்டு “பேரனைப் பேசச் சொல்லு” கேட்டார் நான் விடலை .அவனுக்குத் தெரிந்த ஒரே வார்த்தைய படக்குன்னு சொல்லிடுவான். “அடுத்தவாட்டி வரும்போது பையனையும் கூட்டிட்டு வாடா”. இது அம்மா.”
மே மாசம் வாரோம்மா. உடம்பைக் கவனிச்சிக் கிடுங்க.
இப்போ ட்ரெய்னில் போய்க்கிட்டு இருக்கோம். அப்பா பெயரை சுருக்கி இவனுக்கு ஹரிஸ்ன்னு பெயர் வச்சிருக்கேன். இவன் வண்டியிலேயே பேசஞ்சர், டிடி இ எல்லாத்தையும் போடா போடான்னு சொல்லிக் கொண்டே இருக்கான்.
ரெண்டு மாச பிள்ளையா பார்த்தவங்க, ரெண்டு வயசுல பேரனைப் பார்க்க போறாங்க. இவன் என்னத்தையாவது சொல்லிடுவான்.
“ஆமாங்க எனக்கும் கொஞ்சம் ஒரு மாதிரியா தான் இருக்கு. கொஞ்சம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே போவோம்”.
ஊருக்குப் போனதும் தாத்தாவுக்கு எப்படி வணக்கம் சொல்லுவ? சொல்லு.
ஆட்டோவில் வந்து இறங்கியாச்சு. படிக்கட்டில் உட்கார்ந்து பேப்பர் படிச்சுக்கிட்டுருக்காரு அப்பா.
மெதுவா “அப்பா” சொன்னேன் .நிமிர்ந்து பார்த்தவர் “வாங்க சரி கிருஷ்ணன் சார் ” கையை நீட்டிக் கொண்டு அவனை வாங்க முயன்று கொண்டே சொன்னார். சற்றும் தாமதிக்காமல் அவன் ரெடிமேட் வார்த்தையை சொல்லிட்டான் “போடா”. எனக்குப் பயத்தில் ,குடல் வாய் வழியா வெளியே வந்துடும் போல இருந்தது.
அவனை விட்டுடுவார் என்னைத் துவைச்சுத் தொங்கப் போட்டுடுவார். தலையைத் தொங்க விட்டுக் கொண்டேன்.
“என்னடா புள்ளை வளத்து இருக்கே? படிச்சவங்க தானே தாயும் தகப்பனும்?. ரெண்டு வயசுப் பய என்னப் பார்த்துப் போடான்னு சொல்லுறான்”. அப்படி இப்படின்னு கத்துவாரே.
“என்ன சொன்னீங்க? ஹரிகிருஷ்ணன் சார். தாத்தாவைப் “போடா “சொன்னீங்களா? எங்க இன்னொரு தடவை சொல்லுங்க. அவன் கொஞ்சமும் தாமதிக்காமல் மறுபடியும் சொன்னான் “போடா”.
சந்தோசம் அவர் உடம்பெல்லாம் புல்லரிக்க அப்படியே பிள்ளையை வாங்கித் தோள் மேல் தூக்கி வச்சிகிட்டு,” எங்கய்யா வந்துட்டாரு. ஏய் செல்லம் இங்க வந்து பாரு யார் வந்திருக்காங்கன்னு?”.
எங்க அம்மா ஓடி வந்தாங்க.
“எங்க ஐயா வந்துட்டாரு, என்னப் பார்த்து “போடா” சொல்லிட்டாரு. இந்தா பாருங்க ஹரி கிருஷ்ணன் சார், உங்க பாட்டி அவளைப் போடி சொல்லுங்க”. அவன் மூணு தடவை சொன்னான் போடி போடி போடி .அம்மாவுக்கும் சந்தோஷம் பிள்ளையைப் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி முத்தம் கொடுத்து
பத்து நாளும் ஒரே “வாடா போடா” தான். வீட்டுக்குள்ள தரையில் படுத்துக் கிட்டு ரெண்டு பேரும் உருண்டு புரண்டு விளையாட, இரண்டு பேரில் யார் பெரியவர் ஹரிஸ்? யாரு பெரிய ஹரிஸ்?ன்னு தெரியல. அப்பாவும் பச்சபுள்ள ஆயிட்டாரு.
தரையில் முட்டிபோட்டு பேரன் என் முதுகில் ஏறி, கால் வலிக்க வில்லையா? ரெண்டு மூணு நாலு அவர் மேலேயே ஒண்ணுக்கு கூட போயிட்டான். தீர்த்தம்ன்னு சொல்லுறார். கையில் கிடச்சத எடுத்து சுவர் முழுசும் கோடு போட்டுக் கிறுக்கி வச்சான்.
நான் சத்தம் போட்டேன் அவர் என்னை அதட்டி விட்டார். விளையாடுவதற்கு வீட்டில் உள்ள எல்லா பொருளையும் எடுத்து எடுத்துக் கொடுக்கிறார். நிறைய பொருட்களை உடைத்து போட்டுட்டான். வீட்டு பூரா கலைச்சி அங்கும் இங்கும் அள்ளிப்போட்டுருக்கான். செருப்பைத்தூக்கி அடுப்பு மேல வச்சிருக்கான். விளக்குமாத்துக்கு ஒரு சட்டையைப் போட்டு பாப்பா விளையாட்டு ரெண்டுபேரும்.
வீட்டில் எங்கேயோ நான் சின்ன பிள்ளையா இருக்கிற போது வாங்கின நாய் பொம்மை, அதைத் தூக்கிட்டு வந்துட்டாரு. அதை வச்சிட்டு ரெண்டு பேரும் சண்டை .எனக்கு உனக்குன்னு.
கடைக்கு தூக்கிக்கொண்டு போய் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வந்து இவன் பாதியைத் தின்னு, அவர் அதைப் பிடுங்கித் தன்வாய்க்குள்ள போட்டுக்கிட்டு…. ஒரே ஆட்டம். பத்து நாளில் என் மனைவி சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து கொஞ்சமா தாத்தான்னு லேசா வார்த்தை வருது. இந்த பத்து நாளும் அப்பா எங்கேயும் வெளியே போகக் கூட இல்லை. அதைவிட முக்கியம் அவருக்கு, வழக்கமா வர்ற கால் இழுப்பும் வரவே இல்லை.
ஊருக்குப் புறப்பட்டாச்சு. “போயிட்டு வாறோம்” அம்மா அப்பாவிடம் விடைபெற்று ஆகிவிட்டது .அப்பாவிடமிருந்து பிள்ளையை வாங்கிக் கொண்டாள்.
“என்ன ஹரிகிருஷ்ணன் சார் ஊருக்கு போறீங்களா? அடுத்து என்னைப் பார்க்க எப்ப வருவீங்க? விளையாடனும் இல்ல.
அப்பாவின் குரலில் எப்போதும் இல்லாத ஒரு தடுமாற்றம், கம்மல். கண் கூட கலங்கிட்டது. தாத்தாக்கு டாடா சொல்லு என் வீட்டுக்காரி. முதல் முறையா “தாத்தா டாடா” அரைகுறையாச் சொன்னான்.
“அப்படில்லாம் மரியாதை இல்லாம பேசக் கூடாது. ஒழுங்கா மரியாதையா “போடா”ன்னு சொல்லுங்க.
நான் அடக்கமுடியாமல், அழுதே விட்டேன். பேரனின் இரண்டு கைகளையும் பிடித்துத் தன் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அடிச்சுக்கிட்டு கண்களில் ஒத்திக்கிட்டு முத்த மாரி பொழிந்துட்டார் அப்பா. .
“இந்தாங்க நாய் பொம்மை” அம்மா கொடுத்ததும் வாங்கிக் கொண்டான்.
“ஹரி கிருஷ்ணன் சார். அது ஏன் பொம்மை கொடுங்க” அப்பா கேட்டதும் “போடா” சொல்லிட்டுப் பொம்மையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். தன் வாய்க்குள் போட்டிருந்த ஆரஞ்சு மிட்டாயை எடுத்து அப்பா கையில் கொடுத்தான். அதை வாங்கி லேசாக நக்கிட்டு தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். ரயிலில் வரும்போதெல்லாம் பத்து நாள் சம்பவங்களைப் பேசிக்கொண்டே வந்தோம். சரியா மூன்றாவது நாள் ஊரில் இருந்து போன்.
இவன் அடுப்பு மேல் தூக்கி வச்ச செருப்பு அப்படியே இருக்கு. அங்குமிங்கும் கலைத்துப் போட்ட பொருட்கள், துணிகள் எல்லாம் அப்படியே கிடக்கு. சுவரில் ஏதேதோ கிறுக்கி வச்சானே அதுவும் இருக்கு. அதுக்கு கீழே சின்ன ஹரிகிருஷ்ணன்ன்னு புதுசா எழுதி இருக்கு.அப்பா freezer box குள்ள சலனமில்லாமல் மல்லாக்கப் படுத்து இருக்கிறார். சுற்றியுள்ளோர் அழுதுட்டு இருக்காங்க.
உற்றுப் பார்த்தேன். கன்னம் ஒரு பக்கம் வீங்கி இருந்தது. அம்மாவை திரும்பி பார்த்தேன் அழுது கொண்டிருந்தவள் ஆரஞ்சு மிட்டாய் டா நாலு நாளா அதை வாய்க்குள்ளே போட்டிருக்கார். சின்ன ஹரிகிருஷ்ணன் நாய் பொம்மையால் அந்தப் பெட்டியை தட்டிக்கொண்டு “வாடா வாடா”ன்னு சொல்லிட்டே இருக்கான்.