நெல்லையில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
1 min read11.7.2020
Four people, including an inspector, were killed in the coronaநெல்லையில் கொரோனாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பலியானார். இது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் உள்ளிட்ட மேலும் மூவர் பலியானதால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாநகர ஆயுதபடையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சாதுசிதம்பரம் (54). பாளை கேடிசி நகரில் குடியிருந்து வந்தார். இவரது மருமகன் ஒருவருக்கு கடந்த இருவாரங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாதுசிதம்பரத்திற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர், இன்று அதிகாலை இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினரும், காவல்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர். நெல்லை மாவட்டத்தில் காவல்துறையில் கொரோனாவுக்கு பலியாகும் முதல் நபர் இவராகும்.
இதற்கிடையில் நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் 64 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு இறந்தார். இவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நெல்லை எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தன்னார்வலர்கள் குழுவினர் மாவட்ட பொதுச்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமையில் உடலை எடுத்து சென்று இஸ்லாமிய மதமுறைப்படி தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.
இதற்கிடையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவர் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனை சாரி ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். இவருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது தெரியவந்தது. இதுபோல் சங்கர்நகர் நாராயணன் நகர் பகுதியைச் சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவர் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறந்தார். மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.