சாத்தான்குளத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்
1 min read11.7.2020
CBI officials launched an investigation into the saathankulamசாத்தான்குளத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர். சிபிசிஐடி போலீசார் திரட்டிய ஆதாரங்கள் மூலம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க வருகிற 13ம்தேதி மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றி (சிபிஐ) தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி. சங்கர் தலைமையிலான போலீசார் 12 குழுக்களாக பிரிந்து கடந்த 1ம்தேதி விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் மற்றும் சாத்தான்குளம் எஸ்எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் செல்லத்துரை, சாமித்துரை, போலீசார் வெயிலுமுத்து, தாமஸ்பிரான்சிஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எஸ்எஸ்ஐ பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 8 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றதால், புதுடெல்லியில் இருந்து 8 சிபிஐ அதிகாரிகள் நேற்று தனி விமானம் மூலம் மதுரை வந்தனர். அங்கிருந்து சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண்குமார், எஸ்ஐக்கள் சுஷில்குமார் வர்மா, சச்சின், ஏட்டு அஜய்குமார், போலீசார் சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகிய 8 பேர் 3 கார்களில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று மாலை 4 மணி அளவில் வந்தனர்.
அவர்களிடம் இதுவரை மேற்கொண்ட விசாரணை விவரம், கைது செய்யப்பட்டோர் விவரம், திரட்டப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் ஒப்படைத்தார். அந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் வழக்கு நிலவரம் குறித்து சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இரவு 9 மணி வரை ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர் அவர்கள் தங்கியுள்ள நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தனர். இன்று காலை 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள், சாத்தான்குளம் போலீஸ் நிலையம், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கடைகள், அரசு மருத்துவமனை, மாஜிஸ்திரேட் கோர்ட் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்த ஆதாரங்களை மூலமாக வைத்து விசாரணை நடந்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேர் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க வரும் 13ம்தேதி மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.