கொரோனா பாதித்த பெண்ணுக்கு பேய் ஓட்டிய பூசாரி
1 min read
11.7.2020
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வேலு. இவரது மனைவி வனிதா. 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர்களது மூத்தமகள் அபிநயாஸ்ரீ (18), குடும்ப வறுமை காரணமாக கோவையில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர், கடந்த மே மாதம் சொந்த ஊரான வெள்ளாளகுண்டத்துக்கு வந்துள்ளார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், வெள்ளாளகுண்டத்தில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை. மேலும், சளித்தொல்லை ஏற்பட்டு அபிநயாஸ்ரீ அவதிப்பட்டு வந்துள்ளார்.
அவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கூறியதால், அதே ஊரில் உள்ள கோயில் பூசாரி ஒருவரை வரவழைத்து, கடந்த மாதம் (ஜூன்) 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, அவருக்கு பேய் ஓட்டியுள்ளனர். மேலும், மாந்திரீகமும் செய்துள்ளனர். ஆனால், அதன் பின்னரும் அபிநயாஸ்ரீக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்நிலையில், கடந்த 9ம் தேதி வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சாதாரண காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரை கொடுத்த மருத்துவர்கள், காய்ச்சல் குணமாகாவிட்டால் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர்.
இந்நிலையில், மறுநாள் (10ம்தேதி) அபிநயாஸ்ரீக்கு காய்ச்சல் அதிகரித்து, உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரை இரவு 10 மணியளவில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரை மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரிப்பட்டி சுகாதாரத்துறையினர், வெள்ளாளகுண்டத்துக்கு சென்று கிருமி நாசினி தெளித்தனர். உயிரிழந்த அபிநயாஸ்ரீயின் பெற்றோர், சகோதரர், சகோதரி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து, இளம்பெண்ணுக்கு மருந்து கொடுத்த மெடிக்கல் கடை, வாழப்பாடி அரசு மருத்துவமனை, பேய் ஓட்டிய கோயில் பூசாரி குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.