ரஜினிகாந்த் காரில் செல்ல இ-பாஸ் பெற்றாரா?- மாநகராட்சி ஆணையாளர் பதில்
1 min read
Did Rajinikanth get an e-pass to go by car? - Corporation Commissioner Answer
22-7-2020
ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு காரில் செல்ல இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் பதில் கூறினார்.
காரில் ரஜினிகாந்த்
கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகை-நடிகைகள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அதேநேரம் பல நடிகர்-நடிகைகள் தங்களின் பல்வேறு படங்களை வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் முக கவசம் அணிந்து சென்றது போன்ற படம் வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அவர் எங்கு ஏன் காரில் செல்கிறார் என்ற விவரம் முதலில் தெரியாமல் இருந்தது.
பின்னர்தான் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் வெளியானது. நேற்று முன்தினம் ( திங்கட்கிழமை) மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி காரில்
கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினிகாந்த் ஓய்வுக்காக சென்றுள்ளார். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர்.
இ-பாஸ்
இந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான இ-பாஸ் அனுமதி பெற்று சென்றாரா? என்ற கேள்விக்கு சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் 5 லட்சம் பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு விரைவில் சோதனை நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.