கேரள விமான விபத்தில் 19 சாவு
1 min read
19 killed in Kerala plane crash
8-8-2020
கேரள விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து
கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று( வெள்ளிக்கிழமை) விமான விபத்து நடந்தது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, இந்த விபத்து ஏற்பட்டது. இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது.
19 பேர் சாவு
விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்புள்ளது.
இந்த விமான விபத்தில் இறந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அந்த விமானத்தில் பயண ம்செய்த பலருக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
விபத்து பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியதாகவும், அவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.