இலக்கிய நிழலில் இளைப்பாறலாம்! / க.முத்துநாயகம்
1 min read
Relax in the literary shade! – By MuthuNayagam
8-8-2020
தினத்தந்தி நாளிதழில் பல ஆண்டுகள் செய்தி ஆசிரியராக பணியாற்றிய க.முத்துநாயகம் அவர்கள் செய்திசாரல் இணையத்துக்காக இலக்கிய நிழலில் இளைப்பாறலாம் என்ற தொடரை படைக்கிறார். இவர் தினத்தந்தியில் மட்டுமல்லாது, ராணி, கோகுலம் கதிர் போன்ற பத்திரிகைகயில் இலக்கிய கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இலக்கியம் என்றால் உயர்மட்ட கல்வியாளர்தான் படிப்பார்கள் என்ற நிலை உள்ளது. ஆனால் இவரது இலக்கியம் பாமர மக்களும் படித்து இன்புறும் வகையில் எளிமையாக உள்ளன. இது வெறும் இலக்கியம் மட்டுமல்ல. தமிழ் மண்ணின் பெருமையை பறைசாற்றும் வரலாறு. ருசிகரமான இந்த வரலாற்றை படித்து இன்பம் பெறுங்கள்.
க.முத்துநாயகம் அவர்கள் செங்கோட்டை அருகே லாலாக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்.
(1) பொற்கை பாண்டியன்
பாண்டிய நாட்டை மாறன் என்று அழைக்கப்பெற்ற குலசேகர பாண்டியன் ஆண்டு வந்தான்.
அவன் நீதி வழுவாதவன்.
மக்களை தனது கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தான்.
மாறுவேடத்தில் நகர்வலம் செல்வது அவனது வழக்கம்.
அப்படி ஒருநாள் சென்றபோது, ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவர், பேசிக் கொள்ளும் உரையாடல் தற்செயலாக அவனது காதுகளில் விழுகிறது!
“நான் வியாபார வேலையாக வெளியூர் செல்கிறேன். திரும்பிவர சிலகாலம் ஆகும்!” என்று கணவன் சொல்கிறான்.
“அதுவரை பயம் இல்லாமல், நான் எவ்வாறு தனித்து இருப்பது?” என்று அச்சம் தொனித்த குரலில் மனைவி கேட்கிறாள்.
அதற்கு, “நீ பயப்படத் தேவையில்லை. நமது மன்னவன் நல்லாட்சி நடத்துகிறான். அவனது காவல் உன்னை காத்து நிற்கும்!” என கணவன் ஆறுதல் கூறுகிறான்.
அதைக் கேட்ட மாறன், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். தன்மீது குடிமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை எண்ணி, ஒரு கணம் மெய்சிலிர்த்துப் போனான்.
அதுமுதல் ஒவ்வொரு நாளும் நகர்வலம் வரும்போது, அந்த வீட்டின்மேல் தனிக்கவனம் செலுத்தினான்.
நாட்கள் சில கடந்தன!
ஒரு நாள் இரவு அந்த வீட்டிலிருந்து, பேச்சுக்குரல் கேட்க, மன்னன் மாறன், சந்தேகம் அடைந்து கதவைத் தட்டினான்.
“யாரது, கதவைத் தட்டுவது?” என்று ஒரு ஆண்குரல் மிரட்ட, மாறனுக்கு நிலைமை விளங்கிவிட்டது.
வியாபார வேலையாக வெளியூர் சென்ற அந்தப் பெண்ணின் கணவன் திரும்பிவந்துவிட்டான். கதவை அவசரப்பட்டு தட்டிப், பிழை செய்துவிட்டோம். இந்நேரத்தில் கதவைத்தட்டியதால், அந்தப் பெண் மீது, அவளுடைய கணவன் சந்தேகப்படக்கூடுமே! என்ன செய்வது? என்று மாறுவேடத்தில் இருந்த, மாறனின் மனம் குழம்பியது.
மறுகணமே ஒரு யோசனை உதிக்க, அந்தப் பெண்ணின் நலன் கருதி, வீதியில் இருந்த எல்லா வீட்டுக் கதவுகளையும் ‘படபட’வென தட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
மறுநாள் அரசபைக்கூடியது.
“இரவில் கள்வன் வந்து, எங்கள் வீட்டுக்கதவுகளை தட்டினான்!” என்று அந்த வீதி, மக்கள் ஒருசேர வந்து, மன்னனிடம் புகார் செய்தனர்.
“கள்வனைக் கண்டுபிடித்து, என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று அவர்களிடமே மாறன், கேட்டான்.
கதவுகளைத் தட்டியது கள்வன் அல்ல; காவலன் என்பதை அறியாத மக்கள், “தட்டியவன் கையை வெட்ட வேண்டும்!” என்றனர்.
மறுகணமே மாறன், உடைவாளை ஒருகையால் உருவி, தனது மறுகையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்டச்சொட்ட நின்றான்!
“மன்னா…! என்ன செயல் செய்துவிட்டாய்?” என்று அங்கு கூடிநின்ற மக்கள் கண்களில், நீர் கொட்டக்கொட்ட புலம்பினார்கள்.
கதவுகளை தட்டியதற்கான காரணத்தை விளக்கிய மாறன், தான் செய்த பிழைக்கு தனக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்று பெருமிதம் கொண்டான்!
அரண்மனை வைத்தியர்கள் அவனுக்கு அவசர சிகிச்சை அளித்து, பொன்னால் ஆன கையை பொருத்தினார்கள்.
அன்று முதல் குலசேகர பாண்டியன், ‘பொற்கை பாண்டியன்’ என்று அழைக்கப்பட்டு, புகழ் உச்சிக்குச் சென்றான்!
ஒருநாள் நள்ளிரவு நேரம். மேகங்கள் தூங்கப் போய்விட்டன. வானவீதி வெறிச்சோடிக் கிடந்தது!
நிலா மங்கை மட்டும் உலா வந்தாள். நட்சத்திரங்கள் ஆங்காங்கே அவளை, கண்ணடித்துக் கொண்டு நின்றன!
கவிச்சக்கரவர்த்தி கம்பர், படுக்கை அறையில் புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்.
அருகில் மனையாள் படுத்திருந்தாள்.
இருவரையும் தூக்கமும் தழுவவில்லை! இருவரும் தழுவிக்கொள்ளவும் இல்லை!
சற்று கண்ணோரமாய் அயறும் நேரம் வரும்வேளை! கதவை யாரோ ‘படபட’வென்று தட்டும் சப்தம் கேட்டது.
“யாரது வேளைகெட்ட வேளையில்?” மெல்லிய குரலில் சிறு கோபத்துடன் மனையாள் கேட்க, அதேக் கேள்வி கம்பரின் மனதிலும் எழுந்தது!
அவர் படுக்கையைவிட்டு எழுந்தார். வாயிலை நோக்கி நடந்தார். கதவைத் திறந்தார்.
அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த தென்றல் தாவிவந்து, அவரை ஆரத்தழுவிக் கொண்டது! கவியரசர் மெய்மறந்தார்.
யாரையும் அங்கு காணவில்லை! என்ன இது மாயை?
கதவை யாரும் தட்டவில்லை! தென்றல்தான் தட்டியிருக்கிறது என்பதை உணர்ந்தார்.
கவிஞர் அல்லவா? தென்றலோடு பேசுகிறார்…
“ஏ…தென்றலே! ஒருநாள் இரவு ஊரார் கதவுகளை தட்டிய ஒரே பிழைக்காக,
கொற்கைப் பாண்டியன் குலசேகரப் பெருமான், பொற்கை பாண்டியனான கதை உனக்குத் தெரியாதா?
அந்த ஒரு கதை மட்டும் உலகுக்கு போதாதா?
தாமரை மலர்களின் மணத்தினை வாரிக்கொண்டு வந்து, அழகிய என் வீட்டு வாயிற் கதவினை அசைப்பதற்கு, தென்றலே நீ
ஏன் வந்தாய் சொல்?”
இவ்வாறு, மயில் இறகால் வர்டினாற்போல் தென்றலுக்கு வலியாது, கடிந்து கொள்பவராய்க் கேள்விகளைக் எழுப்பினார், கம்பர்!
அதாவது, ஊரார் வீட்டுக் கதவுகளை தட்டிய பிழைக்காக, மன்னவன் ஒரு கையை இழக்க நேரிட்டது!
இரவில் தூக்கத்திற்கு இடையூறு செய்து, என் வீட்டுக் கதவைத் தட்டியதால், தென்றலே நீயும் கையை இழக்க நேரிடுமே! என்று அவர் மென்மையான தொனியில் மறைமுகமாக மிரட்டுகிறார்.
இதற்கு உரையாசிரியர்கள் விளக்கம் தரும்போது, பொற்கைப் பாண்டியனைப் போல (கதவைத் தட்டி) புகழ்பெற நினைத்து, நீயும் (தென்றல்) என் வீட்டு கதவைத் தட்டிச் சென்றாயோ? என்று கம்பர் கேட்பதாய் குறிப்பிடுகிறார்கள்.
சரி! எதுவாயினும் ‘தென்றல்’ எனச் சொல்வதே அழகு!
அந்த கம்பர் தமிழை எவ்வாறு பொருள் கொண்டாலும் பேரழகு!
இதோ அவர் பாடிய செய்யுள்…
“கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்
பொற்கையான் ஆனகதை போதாதோ- நற்கமல
மன்றலே வாரி மணிவா சலையசைக்கத்
தென்றலே ஏன் வந்தாய் செப்பு?”
செய்யுளுக்கு நேரடிப்பொருள்:- தென்றலே! கொற்கைத் துறைக்கு உரியவன், பாண்டியன் குலசேகரப் பெருமான். அவன் பொற்கையன் ஆனகதை போதாதா?
நறுமணமிக்க தாமரை மலர்களின் மணத்தினை வாரிக் கொண்டுவந்து அழகிய என் வீட்டு வாயிற் கதவினை அசைப்பதற்காக நீ எதற்காக வந்தாய் சொல்வாயோ?