பார்த்த விழி பார்த்தபடி…/ சிறுகதை /முத்துமணி
1 min read
Partha vizhi Parthapadi – Short story by Muthumani
10-8-2020
விளாத்திகுளம் பஸ் ஸ்டாண்ட்.அதிகாலை 2 மணி. ஒரே கூட்டம். நாமதான் வருஷத்துல பாதி நாள் ராத்திரி கண் முழிச்சு, தூக்கத்தைக் கெடுத்து, மதுரையில பேசப்போறேன், மயிலாடுதுறையில் பேசப்போறேன், இன்னிக்குரேடியோ ரிக்காடிங்க் ,டிவியில் பொங்கல் பட்டிமன்றம் சூட்டிங்கின்னு, பீத்திகிட்டு, கையில இந்தப் பையயும் ,தூக்கிகிட்டு, மேடையில் அரைச்ச மாவையே அரச்சி, எவன் கழுத்தையாவது விடிய விடிய அறுத்துட்டு, விடிஞ்சப்பிறகு வீடு திரும்புறது வழக்கம்.
எத்தன ஊர்? எத்தன பஸ்ஸ்டாண்ட்? இருபது வருஷம்,இப்படிக் காத்துக் கிடந்ததிருக்கோம்…விடிய விடிய கொசுக்கடி, தூக்கக் கலக்கம், இயற்கை உபாதை அடக்கம், பஸ் ஸ்டாண்ட்ல, பஸ்சுக்காகக் காத்துக் கிடந்து பழகிட்டோம்.
இவங்களுக்கு என்ன வேலை? எங்க போவாங்க? எப்பப் பார்த்தாலும் கூட்டமாத்தான், கிடக்கு. தினமும் இப்படிக் குடும்பத்தோட, குழந்தை குட்டிகளோட, எங்க போவாங்க? ஆளாளுக்கு என்ன வேல இருக்கும்? இப்படி ;யோசிக்கிட்டே நின்றுகொண்டிருந்தார், பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நகைச்சுவை அரசு, தொலைக்காட்சிப் புகழ், புலவர் கவிஞர்.திரு.பழனியப்பன்.
ஆட்டோவில்,கூடவே வந்து, ஒண்டற மணிக்கு, ஒரு டீய வாங்கிக் கொடுத்துட்டு,ஒரு வணக்கத்தப் போட்டுட்டுப் போய்ட்டாங்க நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணிணவங்க.அவங்க கடமை அத்தோடு சரி. இப்போ,பேச்சுத் துணைக்கு யாரும் இல்லை. இங்கருந்து கோவில்பட்டி போய்,அப்புறம் அங்கருந்து ,வேற பஸ்ஸைப் பிடிச்சாத்தான் ஊருக்குப் போக முடியும். எப்படியும் விடிஞ்சிடும் வீட்டுக்குப் போறதுக்கு. சிமெண்ட் பெஞ்ச் கிடக்கு. உட்கார முடியல. உக்காந்தா கவுரவம் போய்டும், அப்புறம் வேட்டி அழுக்காகிடும். வீட்ல போயி மனைவியிடம் வசவு வாங்க நேரிடும்.
இதுக்காகவே கால் கடுக்க நிக்கனும். சில நேரங்களில், குரூப்பா பட்டிமன்றத்துக்குப் போயிட்டு வந்து இப்படி நின்னா கூட, கஷ்டம் தெரியாது பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கும். அஞ்சி மணிக்குத்தான் பஸ். தனிச் சொற்பொழிவு போயிட்டு வந்தா இப்படித் தனியாத்தான் கிடக்கணும்.
"சார் வணக்கம்". குரல் கேட்டு திரும்பினார் பழனியப்பன். இளைஞன் ஒருவன். "சார் போன மாசம், எங்க ஊர்ல பேச வந்தீங்க. கலக்கிட்டீங்க சார்" "அப்படியா? சந்தோஷம் தம்பி நல்லா இருக்கீங்களா?.ஆமா,தம்பிக்கு எந்த ஊரு?".
"பக்கத்தில,சின்னூர்தான் சார். நிறைய ஊருக்குப் போறோம்.அதான் தம்பி .மறந்துதுடுது". "பரவாயில்லை சார்.குடும்பத்தோடு திருச்செந்தூர் போ றோம் சார்."
“ஓகோ.அதான் கூட்டமா இருக்கு”.
“இன்னைக்கு எந்த ஊர்ல மீட்டிங் சார்?.கூட யாரும் வரலியா.?தனியா நிக்கீங்க?”
"பக்கத்தில்தான் தம்பி, ஒரு கிராமம். மாசார்பட்டி. அம்மன் கோயில் திருவிழா.பக்திச் சொற்பொழிவு. நான் மட்டும்தான்.தனியா நின்னுப் பழகிப் போச்சி"
“அப்படியா?. சார் வாங்க ஒரு டீ சாப்பிடலாம் சார்”.
“இல்ல தம்பி இப்பதான் சாப்பிட்டேன்”.
” சார் பிளீஸ், எனக்காக, ஒரு அரை கிளாஸ் டீ மட்டும்”. அன்புக்குக் கட்டுப்பட்டு இன்னொரு டீ குடித்து விட்டார்.
“சார் இதுல ஒரு கையெழுத்து, உங்க அட்ரஸ், போன் நம்பர்”. ஒரு டைரியை கொடுத்து ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டான். அப்போது பெருமிதத்தோடு சுற்றி யாரும் கவனிக்கிறார்களா? என்று ஒருமுறை பார்த்து மகிழ்ந்தார் பழனியப்பன்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம், “ஏய் மாப்ள, சார் பெரிய பட்டிமன்ற பேச்சாளர்” என்று பெருமையாகச் சொன்னான். அவன் இவருக்கு பெரிய வணக்கம் ஒன்றைப் போட்டான்.இந்த மாதிரி எப்பவாது கிடைக்கிற மரியாதை ஒன்றுதான் பேச்சாளர்களுக்கு மிச்சம்.
“சரிங்க சார் வீட்ல கூப்பிடுறாங்க.எங்களுக்குப் பஸ் வந்துடும். நான்வர்றேன்.”போயிட்டான்.
கொஞ்சநேரம் தூணில் சாய்ந்துகொண்டு, அப்படி இப்படி நேரம் போயிருச்சு. அஞ்சு மணிக்குப் பிறகு, பத்து நிமிஷம் கழிச்சுதான் பஸ் வருது.கூட்டத்தில் அடித்துப்பிடித்து பின்வாசல் வழியா ஏறி இடது பக்கம் இரண்டு பேர் உட்காரும் சீட்டில், டக்குனு உக்காந்திட்டார்.அப்பா எப்படியோ இடம் கிடைச்சிருச்சு. இல்லாட்டித் தொங்கிகிட்டு, கோவில்பட்டி போறதுக்குள்ள உயிர் போய்டும். திமுதிமுவென்று கூட்டம் ஏறிக்கொண்டே இருந்தது. வண்டி ஃபுல். ஸ்டாண்டிங் வேற.
உக்காந்து, பையை மடியில வச்சு நல்லா சாஞ்சி, ஒரு தூக்கத்தைப் போட வேண்டியதுதான்… அப்படியே பின்புறம் சாயும்போது தற்செயலா முன்னாடி பார்வை சென்றது. டிரைவருக்குப் பின்னால, கம்பியைப் புடிச்சுக்கிட்டு, அழகான பொண்ணு ஒருத்தி இங்கிட்டு திரும்பி நின்னா.
என்ன ஆச்சரியம்? .வலது பக்கமாக நின்னுகிட்டு, இடது பக்கம் இருக்கிற நம்மை அப்படி ஒரு பார்வை பார்த்து கொண்டே இருக்காளே!. நம்மைத்தான் பார்க்கிறாளா?. சீ சீ…நம்மைப் பார்ப்பதற்கு நமக்கு என்ன வாலிப வயசா?. ஒருவேளை நம் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற ஆளைப் பார்க்கலாம், என்று நினைத்து இப்போதுதான் வலது பக்கம் யார் இருக்கிறார்? என்று பார்த்தார்.
அவர் இவரை விடப் பெரியவர் 65 வயது இருக்கும். நிச்சயமாக அவரைப் பார்க்க வாய்ப்பில்லை. நைசா இன்னும் பார்க்கிறாளா? என்று நிமிர்ந்து பார்த்தார். அதே சிரித்த முகத்தோடு பார்வையை அகற்றாமல் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பது நன்றாகத் தெரிந்தது.
அவருக்கு நம்பிக்கை இல்லை நமக்குப் பின்னால் ,ஒரு நீள சீட் இருக்கு. அதுல ஏதாவது ஒரு அழகான இளைஞன் உட்கார்ந்து இருக்கக்கூடும். அவனைத்தான் பார்ப்பாள்.சரி, அந்த லக்கி பெல்லோ யாரென்று பார்ப்போம், என்ற ஆசையில் மெதுவாகத் திரும்பிப் பார்த்தார். அந்தக் கடைசி சீட்டில் ஆறு பேர் உட்கார்ந்திருந்தார்கள் அதில் ஒரு மூஞ்சியும் உருப்படி இல்லை.எல்லாம் தூக்கம் வேற. அப்படியானால் நம்மைப் தான் பார்க்கிறா!!!!
அப்போது பஸ்ஸில்’ என்ன பார்வை இந்தப் பார்வை?’ பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு . பழனியப்பனுக்கு ஒருவித வெட்கம் தோன்றியது. பொதுவாக 45 வயது தாண்டிய, ஆண்களைப், பெண்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று எங்கேயோ கேள்விப் பட்டது நினைவுக்கு வந்தது. நமக்குத்தான் அம்பது ஆச்சே?. அந்தப் பொண்ணுக்கு வயது இருபது அல்லது இருபத்தி ரெண்டுதான் இருக்கும். பிறகு எப்படி?
மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வோம் நம்மைத் தான் பார்க்கிறாளா? என்று. மீண்டும் ஏறிட்டு மெதுவாப் பார்த்தார். அவரைத்த்தான் பார்க்கிறா.சந்தேகமே இல்லை.அவர் மனதுக்குள் ஒரு இன்ப உணர்ச்சியும் கிளர்ச்சியும் ஏற்பட்டது உண்மைதான். இதுபோன்ற அனுபவங்கள் எல்லாம் மறந்து போன காலமல்லவா?. மீண்டும் ஒரு புதுவசந்தம் வந்தது போல, ஒரு இன்ப உணர்வு.
அவளைப் பார்க்காதது போல் நடித்து, இங்கு திரும்பி, மெதுவாக மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்தார். அவள் அவரைத்தான் இப்போதும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது ‘பார்வை ஒன்றே போதுமே’ பாட்டு ஒலித்தது.
அவரை அறியாமல் மடியிலிருந்த பையைத் திறந்து, சீப்பை எடுத்து தலையை இலேசாக சீவி, பின்னால் இருந்த முடியைக் கொஞ்சம் முன்னாடி இழுத்து விட்டு, முன்பக்கச் சொட்டையை மறைத்துக் கொண்டார். ஆவலோடு நிமிர்ந்து பார்த்தார். அவரையே இமைக்காமல் இன்னும் பார்க்கின்றன அந்தக் காந்த விழகள்.
கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். மீண்டும் அவளைப் பார்க்கிறார். அவள் எங்கும் திரும்பிப் பார்க்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறா.
இரண்டு மூன்று முறை கண்டக்டர் அங்கும் இங்கும் வந்து போகும் போதெல்லாம்,அந்தத் தேவதையின் முகம் மறைந்தது. ஆனால் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் தெரிந்தது அழகு முகம்.’கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ பாட்டு ஓடுது.
அவர் சீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த,குண்டான ஒருவர் கொஞ்சம் இடப்புறம் நகர்ந்து அந்த சீட்டில் அப்படியே சாய்ந்தார். ஐயோ! இப்போது அவள் முகம் பழனியப்பனுக்குத் தெரியவில்லை. எவன்டா இவன்? தடியன், என்று மனதுக்குள்அவனைத் திட்டிக்கொண்டு சற்று இடது பக்கமாகக் கழுத்தை வளைத்து, சந்து வழியாகப் பார்த்தார். ‘எங்கே அவள் என்றே மனம் தேடுதே’ பாட்டு.. அவள் பார்வை சற்றும் அகலவில்லை. இவருக்குச் சந்தோசம் தாங்கவிலை.
கண்டக்டர் விசில் அடித்தார். வண்டி நின்றது .ஏதோ ஒரு ஸ்டாப் கொஞ்சபேர் இறங்கினார்கள். அதில் இவருக்கு முன்னால் நின்றுகொண்டு அவள் திருமுகத்தை மறைத்த, நந்தி இறங்கிட்டான்.
இப்போது மிகத் தெளிவாகத் தெரிந்தாள் அவள். அவருக்கு வசதி யாப் போச்சி. வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறா.'இப்போ 'விழியே கதை எழுது' பாட்டு பாடுது பஸ்சில்.
பெண்கள் அப்படிப் பார்க்கிற போது நமக்கு ஒரு பெருமையும், மகிழ்ச்சியும், சந்தோசமும் ஏற்படத்தான் செய்கிறது. இவள் யாராக இருக்கும்? . ஒருவேளை எங்காவது பட்டிமன்றத்தைக் கேட்டிருப்பாள். நம் பேச்சுக்கு ரசிகையாக இருந்தாலும் இருக்கும். இப்படியெல்லாம் யோசித்தார்.
வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில், நாம் சுமாராத்தான இருப்போம். இப்படிஎல்லாம் நடக்கும் இன்னும் தெரிஞ்சா, நல்ல கலர் சட்டையைப் போட்டு, பேண்ட் போட்டு அசத்தி இருக்கலாமே. மீசையை தடவிக் கொண்டார்.அங்கிருந்த நான்கைந்து வெள்ளை முடிகளை, ஒரு விரலை வைத்து மறைத்துக் கொண்டார்.
அங்கிருந்து பார்ப்பதற்கு வெள்ளை முடிகள் தெரியவா போகுது? இருந்தாலும் அப்படி ஒரு எண்ணம் வருகிறது. அவள் பக்கத்திலேயே இன்னொரு பெண். வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அவள், இப்போது இவளிடம் பேச்சுக் கொடுத்தா.
இங்கிருந்து வாய் அசைவு தெரிகிறது. என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அவளோடு பேசிக்கொண்டே, இருந்தாலும் இவர் மீது வைத்த பார்வையை மட்டும் மாற்றவே இல்லை.'பார்த்த் முதல் நாளே' பாட்டு இப்போ ஒலித்தது.
அப்படியானால் நமக்கு இன்னும் மவுசு குறையவில்லை. உங்களைப் பாத்தா அவ்வளவு வயசு தெரியல சார் ன்னு யாரோ சொன்னாங்களே. அது நிஜம்தானோ? மனசுக்குள் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது.
எந்த ஊருக்குப் போகிறாள்?. கோவில்பட்டி வருவாளா? இடையில் இறங்கி விடுவாளா? கோவில்பட்டி வரை வந்தால் நன்றாக இருக்கும். என்றெல்லாம் மனம் சொன்னது.
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க ஆணாகிய தனக்கே வெட்கமாக இருக்கிறது. அவள் எப்படி சிறிதும் வெக்க, கூச்சமும் இல்லாமல் இப்படி என்னைப் பார்வையால் விழுங்கிக் கொண்டே இருக்கா. நாம் அவ்வளவு கவர்ச்சியாகவா இருக்கிறோம்? கொஞ்சம் வியர்த்து விட்டது.
பைக்குள் இருந்து பவுடர் டப்பாவை எடுத்து மெதுவாகத் கையில் தட்டி, கொஞ்சம் முகத்தில் அப்பிக் கொண்டார் பழனியப்பன்.பக்கத்தில் இருந்த பெரியவர் இவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார். பழனியப்பன் அசடு வழிய லேசாச் சிரித்துக் கொண்டார்.
நிமிர்ந்து பார்த்தார்.அவள் பார்வையை அகற்றவே இல்லை. பைக்குள் கையைவிட்டு கண்ணாடியை எடுத்து முகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார். இப்போ 'இந்தப் புன்னகை என்ன விலை' பாட்டு ரசிக்கச் சொன்னது.
சிலபேருக்கு வயசானாலும் மார்க்கெட் போகாது. இன்னும் நீங்க இளமையாதான் இருக்கீங்கன்னு அடிக்கடி ஃப்ரண்டு சொல்வானே சொன்னது நிஜம்தானோ?.நமக்கு ஒரு யோகம் இருக்கு . எவர்கிரீன் லிஸ்டில் நாமும் இருக்கிறோம், என்று நினைக்கும்போது பழனியப்பனுக்குத்
தூக்கம் வரவில்லை வண்டி தூக்கி தூக்கிப்போட்ட கஷ்டம் கூட தெரியவில்லை. எப்படித்தான் எட்டயபுரம் வந்தது என்று தெரியவில்ல.அதுக்குள் எட்டயபுரம் வந்துவிட்டது. முன்புற பின்புற வாசல்கள் வழியாக ஆட்கள் இறங்கினார்கள். ஐயோ அவள் இங்கே இறங்கி விடக்கூடாது என்ற நினைப்பு தான் பெரிதாக இருந்ததுஅவருக்கு.
அவளோடு பேசிக் கொண்டிருந்த இன்னொரு பெண் வேகமாக கீழே இறங்கிட்டா. கீழே இறங்கியவ. “அடியே மாலா, மாறுகண் மாலா சீக்கிரம் இறங்கி வாடி நின்னுகிட்டு தூங்கிட்டியான்னு”. கூப்பிட்டா.
படார் என்று யாரோ செவிட்டில் அடித்ததுபோலிருந்தது, நகைச்சுவை வேந்தர். புலவர். தொலைக்காட்சிப் புகழ். பழனியப்பனுக்கு.” இந்தாம்மா மாறுகண் மாலா இறங்கு. இன்னைக்கு மில்லு வேலைக்குப் போகலியா?”என்ன முறைப்பு, நீ எங்க பாக்குறன்னு யாருக்கும் தெரியல.எங்க பாக்குரன்னும் தெரியல. இறங்கு இறங்கு.பாத்துப் போத்தா, டிக்கெட் வாங்கினியா இல்லையா?’. என்றான் கண்டக்டர்.
பஸ்ஸை விட்டு இறங்கும் போதும் அந்தப் பார்வை அகலவில்லை. இறங்கிப் பஸ்சுக்கு எதிர்புறமாக நடந்து போகிறாள் அப்போதும் பார்வை மாறவில்லை. அந்தக் கண்களின் இயல்பு, அதுதான். கடவுள் கொடுத்தது. எப்படி மாறும்?. இப்படி எத்தனை பேர் தன்னைத்தான் பார்க்கிறாள் என்று நினைத்து ஏமாந்தானோ?... பக்கத்தில் இருந்த பெரியவர் இறங்கிவிட, "அப்பாடா கொஞ்சம் குத்தாவைப்போம்". என்று சொல்லிக்கொண்டு கண்டக்டர் வந்து உட்கார்ந்தான்.முதல் நாள் இவ பஸ்சுக்கு வந்த போது நானே ஏமாந்துட்டேன் என்று அவனுக்கு அவனே பேசியது காதில் விழுந்தது.
பவுடர் எல்லாம் போட்டு, இல்லாத தலைமுடியை சீவி, தூக்கத்தையும் அடக்கிக்கொண்டு, ஐயோ பழனியப்பனுக்கு வெட்கமாக இருந்தது. ஒரு பக்கம் ஏமாற்றமாகவும் இருந்தது.
இது மாறுகண் இல்ல மாறாத கண்ணு.அதே நேரத்தில் மாலா மீது ஏனோ ஒரு இரக்க உணர்வும் தோன்றியது. முகத்தை அழகாக படைத்த இறைவன் கண்களையும் கொஞ்சம் நேராகப் படைத்திருக்கலாம்!. ம்.. ம். என்ன செய்ய?.