“கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா”- இளையராஜா உருக்கம்
1 min read
“I pray to God. Balu come soon” – Ilayaraja melted
15-8-2020
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து இளைய ராஜா உருக்கமான வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் “கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா” என்று குறிப்பிட்டு உள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிமணியம்
பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை நேற்று மோசமானதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இளையராஜா
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணம் அடையவேண்டும் அவரது ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள். அவர் நலம் பெற வேண்டி இசை அமைப்பாளர் இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நமது வாழ்வு வெறும் சினிமாவுடன் முடிந்து போவதும் அல்ல, சினிமாவுடன் தொடங்கியதும் அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த இசை நிகழ்ச்சி நமது வாழ்வாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்தது. அந்த கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பும் இசையும் பிரிந்ததில்லை. எப்படி ஸ்வரங்கள் பிரியாது இருக்கிறதோ அது போல நமது நட்பும் எந்த காலத்திலும் பிரிந்ததில்லை. நாம் சண்டை பேட்டாலும் சண்டையில்லாத போதும் அது நட்பே என நீயும் அறிவாய், நானும் அறிவேன். நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா..
இவ்வாறு இளையராஜா வீடியோவில் பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான்
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “இசைப் பிரியர்கள் அனைவரும், எஸ்.பி.பி.க்காக வேண்டிக் கொள்ளுங்கள்” என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இசை அமைப்பாளர்கள் அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், ரஜினி மகள் சவுந்தர்யா உள்பட பலர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்காக வேண்டியுள்ளனர்.