எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய ரஜினி பிரார்த்தனை
1 min read
Rajini prays for SB Balasubramaniam’s recovery
17-8-2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாயக் கட்டத்தில் உள்ள பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினி வேண்டுகிறார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.
இன்று(திங்கட்கிழமை) வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார்.
ரஜினிகாந்த்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணம் அடைய ரஜினி காந்த் இறைவனை வேண்டியுள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி அவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்விப்பட்டதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர் மிக சீக்கிரம் குணமாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். நன்றி” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கவலைக்கிடம்
இந்த நிலையில் இன்று மாலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எம்.எஸ்.பாஸ்கர்
நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்…. ஆனா கைவிட மாட்டான் என்று ரஜினி பேசும் வசனம் எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது. கோடிக்கணக்கான ரசிகர்களை சந்தோஷப்படுத்திய அவர், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” என்றார்.