இலக்கிய நிழலில் இளைப்பாறலாம்! —–(4) அவ்வையின் தாய்மொழி வழிபாடு / முத்துநாயகம்
1 min read
“Let’s relax in the literary shade-4 ” By Muthunayagam
குருகூர் என்று அழைக்கப்பெற்ற ஆழ்வார் திருநகரியில் அமைந்து இருப்பது, திருமால் திருப்பதி!
அத்திருக்கோவிலில் இறைவனை வழிபட, வடமொழி பயன்பாட்டில் இருந்ததால் எதிர்ப்பு நிலவி வந்தது.
ஒருநாள் எதிர்ப்பாளர்கள் கோவிலில் வந்து கூடினார்கள். கோவில் நிர்வாகிகளைச் சந்தித்தார்கள்.
தாய்மொழியான தமிழில்தான் வழிபாடு நடத்தவேண்டும் என்ற தங்களது விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
நிர்வாகிகளோ அதை ஏற்க மறுத்தார்கள்.
அந்தவேளை அவ்வைப் பிராட்டி, அங்குவந்து சேர்கிறார்.
தமிழ்மொழியில்தான் வழிபாடு நடத்தவேண்டும் என்று விரும்புகிறவர்கள், அவ்வையாரிடம் ஓடோடி வருகிறார்கள்.
“தாயே! அன்னை மொழியைவிட்டு, அறியா அந்நியமொழியில் இறைவனை வழிபடுவது, நியாயமா?” என்று கேட்கிறார்கள்.
கோவில்தரப்பினரும் அவரை அணுகுகிறார்கள்.
அவர்களின் உள்ள உணர்வுகளை புரிந்து கொண்ட அவ்வையார், இறைவனை வழிபடும், வழிபாட்டு மொழியை வரையறுத்துக் கூறுகிறார்.
எப்படிக் கூறுகிறார் தெரியுமா?
“குருகூரில் கோவில் கொண்டு இருக்கும் இறைவன் செம்பொருளாய்த் திகழ்பவன்!
எந்த வேதங்களாலும் அவனை அறிய முடியாது. அவற்றை எல்லாம் அவன் கடந்து நிற்பவன்!
அவனை வழிபடும் மரபு என்று அந்நிய மொழியைச் சிலர் சொல்வார்கள்! நானோ, ‘உலகில் தாய்மொழியே வழிபாட்டிற்கு உகந்தது’ என்று சொல்வேன்!
இன்னும் சொல்லப்போனால், அந்நிய மொழி ஆனாலும் சரி! தாய்மொழி ஆனாலும் சரி! இரண்டுமே இறைவனுக்கு ஒன்றுதான்!
வாய்மொழியாக வழங்கி வருவதை மறை என்கிறார்கள். அந்த மறைமொழிபோல் பல மொழிகள் இறைவனை வழிபட பயன்பட்டு இருக்கின்றன.
இருந்தாலும் ‘அனைத்து மொழிகளும் (தாய்மொழி தவிர) தள்ளப்பட வேண்டியன’ என்றே சொல்வேன்!”
இவ்வாறு அறிவுரை வழங்கிவிட்டு குருகூர் கோவிலைவிட்டு, புறப்பட்டுச் செல்கிறார், அவ்வை மூதாட்டி!
எவ்வளவு தெளிவான, தீர்க்கமான தீர்ப்பு?
தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் மகிழ்ந்தார்கள்.
எதிர்த்தவர்களோ, “பழக்கத்தை மாற்ற மாட்டோம்!” என்று மறுத்தார்கள்.
அன்று என்ன?
இன்றுவரை மறுத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்!
ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் ஆண்டுகளாய், தமிழனின் ஆன்மிகத்தையும், நாகரிகத்தையும், கட்டிடக்கலையையும், தஞ்சை பெரிய கோவில், உலகின் உச்சியில் போய் உயர்த்திப் பிடித்துக் கொண்டு நிற்கிறது!
ராஜராஜ சோழன் என்ற மாபெரும் தமிழ் மன்னனால், கலைவண்ணனால் கட்டியெழுப்பப்பட்ட அந்த கலைக்கோவில் கட்டிடத்தில், ஒளிந்திருக்கும் ஒவ்வொரு கல்லிலும் எத்தனை ஏழை, எளிய தமிழனின் கைவிரல் ரேகை பதிந்திருக்கும்? வியர்வை உதிர்ந்திருக்கும்?
பாவம்! அவனது மொழிக்கு மட்டும் அங்கே இடம் இல்லையாம்.
அங்கு நடந்த குடமுழுக்கில், தமிழிலும் மந்திரம் சொல்லலாம் என்று நீதிமன்றம் இரக்கப்பட்டுச் சொன்னது!
பிறந்த மண்ணிலே போராடித்தான் அந்த இரண்டாவது இடத்தைக்கூட, தமிழால் பெறமுடிந்தது!
ஆன்மிக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம்.
“வடமொழி, அது இறைவன் மொழி. அதை ஓதும்போது எழும் ஒலிக்கு சக்தி உண்டு! அதுவே ஆகமவிதி!” என்றெல்லாம் சொன்னார்.
நாம் பணிவோடு கேட்பதெல்லாம் ஓரிரு கேள்விகள்தாம்!
அவ்வை மாதரசி, தமிழ்மொழி, இறைவழி இரண்டிலும் பழுத்த கனி என்பது அனைவரும் அறிந்ததே?
அவருக்கு ஆகமவிதி தெரியாதா? தமிழ் மொழி, வடமொழி எழுப்பும் மறை ஒலி புரியாதா?
வலிக்கிறது நண்பர்களே!
ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கலாம். ஆண்டாண்டு காலமாக ‘அறியாமை’க்கு அடிமையாக இருக்கலாமா?
இதோ அந்தத் தமிழ்ப்பிராட்டி அவ்வையின் உரிமைக்குரல்…
(1) ஐம்பொருளும் நாற்பொருளும்
முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும்
சேட்பொருளைத் தண்குருகூர்ச்
சேய்மொழிய என்பர் சிலர்
யான்இவ்வுலகில்
தாய்மொழிய என்பேன் தகைந்து.
(2)சேய்மொழியோ தாய்மொழியோ
செப்பில் இரண்டும் ஒன்றே
வாய்மொழியை யாரும் மறைஎன்பர்-
வாய்மொழிபோல்
ஆய்மொழிகள் சால உளவெனினும்
அம்மொழியும்
சாய்மொழிய என்பேன் தகைந்து.
*
சொல் விளக்கம்:-
ஐம்பொருள்: நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம்.
நாற்பொருள்: அறம், பொருள், இன்பம், வீடு.
முப்பொருள்: மூன்றுதெய்வம்.
பெய்தமைத்த: சேர்ந்து உருவான
செம்பொருள்: இறைவன்.
சேய்மொழி: (சேய்=தூரம்) தூரத்துமொழி- அந்நியமொழி- வடமொழி என பொருள்படும்.
வாய்மொழி: வாய்வழியாக வழங்கி வரும் வேதம்- மறைமொழி.
ஆய்மொழி: வழிபட தகுதியென ஆய்ந்தமொழி.
சாய்மொழி: சாய்க்கப்பட வேண்டிய- தள்ளப்பட வேண்டிய மொழி.
*
அவ்வையாரின் இந்த இரு செய்யுட்களிலும், கடைசி இரு அடிகள், மிக முக்கியமானவை.
(அ) வடமொழி மூலம்தான் இறைவனை வழிபட வேண்டும் என்று ‘சிலர்’ சொல்வார்கள். (இங்கு அவ்வையார் கையாண்டு இருக்கும் ‘சிலர்’ என்ற சொல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று) நானோ, உலகிலே (குருகூர் ஆலயத்தில் மட்டும் அல்ல) இறைவனை வழிபட தாய்மொழிதான் உகந்தது என்று சொல்வேன் என்கிறார்.
(ஆ) ‘மறை’ மொழிபோல் இறைவனை வழிபட ஆய்ந்த மொழிகள் பல இருந்த போதிலும், அவை அனைத்தும் (தாய்மொழி தவிர) தள்ளப்பட வேண்டிய மொழிகள் என்றும் உரக்கவே சொல்கிறார்.
*
இதோ இந்த இரு செய்யுட்களுக்கும் புலியூர்க் கேசிகன் எழுதியிருக்கும் உரைகளை அடிபிறழாமல் கீழே தருகிறோம்…
(1) “ஐவகைப் பெரும் பூதங்களும், நால்வகை பேறுகளும், மூவகை மெய்ப் பொருள்களும் ஆகியவற்றைப் பெய்து அமைத்த செம்பொருள் தண் குருகூரின்கண் கோயில் கொண்டிருக்கும் இறைவன். அவன் எந்த வேதங்களாலும் அறிந்துணரவியலாதபடி அவற்றைக் கடந்தும் நிற்பவன். சிலர் அவனை வழிபடும் மரபு வேத மொழியாகிய அந்நிய மொழி என்பார்கள். யானோ, இவ்வுலகில் அவரவரின் தாய்மொழியே வழிபாட்டிற்கு உகந்தது என்பதனை வலியுறுத்திச் சொல்வேன்”
(2) “தூரத்து மொழியோ தாய்மொழியோ சொல்லப்போனால் இறைவனுக்கு இரண்டுமே ஒன்றுதான். முனிவர்களின் வாய்மொழியான வேதங்களை எவரும் மறை என்று சொல்லுகின்றார்கள். அவர்கள் வாய்மொழிபோல மேலும் காலம்தோறும் ஆய்ந்துரைத்த மொழிகள் பலவாக உள்ளன. எனினும், அம்மொழி வகை அனைத்தும் தள்ளப்பட வேண்டியன எனவே வலியுறுத்தி உரைப்பேன்”
இவ்வாறு உரை எழுதி இருக்கும் புலியூர்க்கேசிகன், இறுதியில் இருவரிகளில், “தாய்மொழி வழிபாட்டை ஆதரித்து, அவ்வை போல் இவ்வளவு தெளிவாக வேறு எவருமே கூறவில்லை!” என்று வியந்து குறிப்பிட்டு இருக்கிறார்.
க.முத்துநாயகம். லாலாக்குடியிருப்பு.