குண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
1 min read
19.8.2020
The body of the policeman who was killed in the bombing is buried with state honorsதூத்துக்குடி மாவட்டத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல் அவருடைய சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வல்லநாட்டில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவரை பிடிக்கச் சென்ற போது ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர் சுப்ரமணியன் தலையில் காயம்பட்டு உயிரிழந்தார். அதன் பின் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவளை கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வீட்டிலிருந்து சுப்ரமணியனின் உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, அதன்பின் காவலர் உடல் வைக்கப்பட்ட பெட்டியை ஐஜி முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் சுமந்து சென்றனர்.
தமிழக டிஜிபி திரிபாதி, தென் மண்டல காவல்துறைத் தலைவர் முருகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சுப்பிரமணியனின் மனைவி 11 மாத கைக்குழந்தையுடன் அழுது புரண்டது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. அவருக்கு டிஜிபி திரிபாதி ஆறுதல் கூறித் தேற்றினார்.
பின்னர் காவலர் சுப்பிரமணியனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதியும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலையும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. காவலர் சுப்பிரமணியன் பணிக்கு சேர்ந்து 3 ஆண்டுகளே ஆனது குறிப்பிடத்தக்கது.